பணப்பட்டுவாடாவை தடுக்க தீவிர நடவடிக்கை - தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா

நடக்க உள்ள சட்டப்பேரவை தேர்தலின் போது பண விநியோகம் மற்றும் பரிசுப் பொருள் விநியோகத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார்
பணப்பட்டுவாடாவை தடுக்க தீவிர நடவடிக்கை - தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா
x
நடக்க உள்ள சட்டப்பேரவை தேர்தலின் போது பண விநியோகம் மற்றும் பரிசுப் பொருள் விநியோகத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார்.தமிழக சட்டப்பேரவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் விதிமீறல்கள், பண விநியோகம் உள்ளிட்டவை தமிழகத்தில் அதிகளவில் நடந்ததாகவும்,இதன் காரணமாகவே ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் 2 முறை ரத்து செய்யப்பட்டதாகவும் கூறினார்.மேலும் வேலூர் தொகுதியில் நாடாளுமன்ற தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கும் காரணம் இதுவே என்றார்.நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலின் போது விதிமீறல் தொடர்பான விபரங்கள் 24 மணி நேரத்திற்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்றும்,அந்த புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முறையாக தமிழக தலைமை தேர்தல் ஆணையர் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுப்பார் என்றார்.பண விநியோகம் மற்றும் பரிசுப்பொருள் விநியோகம் போன்றவற்றை கண்காணிப்பதற்கும், உரிய நடவடிக்கை எடுப்பதற்கும் சிறப்பு பார்வையாளர்கள் 2 பேர் நியமிக்கப்படுவார்கள் என்றும், அவர்களோடு மாவட்ட அளவிலான அதிகாரிகளும் இணைந்து செயல்படுவார்கள் என்றார். 
நேர்மையான, வெளிப்படையான முறையில் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.தமிழகத்தில் பணப்பட்டுவாடாவை தடுக்க அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தியதாகவும்,தேர்தல் பார்வையாளர்கள் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் சுனில் அரோரா தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்