விஸ்வரூபம் எடுத்த 800 பட சர்ச்சை - நன்றி... வணக்கம்... என்று பதிவிட்ட விஜய்சேதுபதி

முத்தையா முரளிதரனின் வேண்டுகோளை ஏற்று 800 படத்தில் இருந்து விலகினார் நடிகர் விஜய்சேதுபதி.
விஸ்வரூபம் எடுத்த 800 பட சர்ச்சை - நன்றி... வணக்கம்... என்று பதிவிட்ட விஜய்சேதுபதி
x
முத்தையா முரளிதரனின் வேண்டுகோளை ஏற்று 800 படத்தில் இருந்து விலகினார் நடிகர் விஜய்சேதுபதி. இதன் மூலம் 800 பட சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து 800 என்ற பெயரில் தயாராகும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

திரையுலக பிரபலங்கள், தமிழ் அமைப்புகள், மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினரும் விஜய் சேதுபதி இந்தப் படத்தில் நடிக்கக் கூடாது என தெரிவித்து வந்தனர். இந்த விவகாரம் குறித்து, தொடர்ந்து அமைதிகாத்து வந்த நடிகர் விஜய் சேதுபதி இலங்கை ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்தார்.

அதில் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிப்பதில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று விஜய் சேதுபதி தெரிவித்தார். மேலும் 800 படம் வெளியாகும்போது கேள்வி கேட்பவர்களுக்கு பதில் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

தன் மீதான தவறான புரிதலால் 800 படத்தில் இருந்து விலக வேண்டும் என நடிகர் விஜய்சேதுபதிக்கு சிலர் தரப்பிலிருந்து கடுமையான அழுத்தம் வருவதை தான் அறிவதாக சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, தமிழ் நாட்டின் தலைசிறந்த கலைஞன் பாதிப்படைவதை தான் விரும்பவில்லை என்றும், விஜய்சேதுபதியின் கலைப்பயணத்தில் வருங்காலங்களில் தேவையற்ற தடைகள் ஏற்பட்டுவிடக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ள அவர் 800 திரைப்படத்திலிருந்து விலகிக்கொள்ளுமாறு விஜய் சேதுபதியை கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

ஒவ்வொருமுறை ஏற்படும் தடைகளால் ஒருபோதும் தான் சோர்ந்துவிடவில்லை என்று அறிக்கையில் தெரிவித்துள்ள, முத்தையா முரளிதரன்,800 திரைப்படம் எதிர்கால தலைமுறையினருக்கும், இளம் கிரிக்கெட் வீரர்களுக்கும் உத்வேகத்தையும், மன உறுதியையும் அளிக்கும் என்று எண்ணியே, தனது சுயசரிதையை படமாக்க சம்மதித்ததாகவும், ஆனால் அதற்கும் தடைகள் ஏற்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிச்சயமாக இந்த தடைகளை எல்லாம் கடந்து படத்தை மக்களிடம் கொண்டுசேர்க்க முடியும் என்றும், இதற்கான அறிவிப்பு விரைவில் வரும்
என்று தயாரிப்பு நிறுவனம் தன்னிடம் உறுதியளித்திருப்பதாகவும் முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.

800 படத்திற்காக தயாரிப்பு நிறுவனம் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் உறுதுணையாக இருப்பேன் என்றும் அறிக்கையில் முத்தையா முரளிதரன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

முத்தையா முரளிதரனின் அறிக்கை வெளியான அடுத்த சில நிமிடங்களிலேயே, அந்த அறிக்கையை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த நடிகர் விஜய் சேதுபதி... நன்றி... வணக்கம்... என்று பதிவிட்டார். விஜய் சேதுபதியின் இந்தப் பதிவு, 800 படத்திலிருந்து அவர் விலகுவதை உறுதிப்படுத்தியது. இவ்வாறாக 800 பட சர்ச்சை முடிவுக்கு வந்தது.

Next Story

மேலும் செய்திகள்