அரியர் தேர்வுகளை ரத்து செய்ததை எதிர்த்து வழக்கு - சென்னை உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை
கல்லூரி மாணவர்களின் அரியர் தேர்வுகளை ரத்து செய்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக பள்ளி, கல்லூரிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால், தேர்வு நடத்த இயலாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, இறுதி செமஸ்டர் தவிர மற்ற தேர்வுகளில் அனைவரும் தேர்ச்சி என்றும், அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கும் இது பொருந்தும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார். இந்த முடிவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார். தமிழக அரசின் உத்தரவு யுஜிசி விதிகளுக்கு எதிராக உள்ளதாகவும், தேர்வை ரத்து செய்ய உயர் கல்வி துறை செயலாளருக்கு எந்த அதிகாரமும் கிடையாது எனவும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். எனவே, அரியர் தேர்வுகளை ரத்து செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார். இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story