கிரானைட் கற்களை அரசுடைமையாக்க கோரிய வழக்கு - மேலூர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து
மதுரை மேலூர் கிரானைட் கற்கள் தொடர்பான 2 வழக்குகளில் பி.ஆர். பழனிசாமி உள்ளிட்ட 3 பேரை விடுதலை செய்து பிறப்பித்த மேலூர் நீதிமன்றத்தின் உத்தரவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்துள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்டு, கீழையூரில் தனியார் பட்டா நிலங்களில் வைக்கப்பட்டுள்ள கிரானைட் கற்களை அரசுடைமையாக்கக் கோரி அப்போதைய மாவட்ட ஆட்சித்தலைவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த இரு வழக்குகளிலும் பி.ஆர்.பழனிச்சாமி, அவரது மகன் சுரேஷ்குமார் ஆகியோரை மேலூர் நீதித்துறை நடுவர் மகேந்திரபூபதி கடந்த 2016ல் விடுதலை செய்தார்.
அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா, அரசு வழக்கறிஞர்கள் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் நீதிபதி பரிந்துரை செய்தார். இந்நிலையில் பி.ஆர்.பழனிச்சாமி உள்ளிட்ட 3 பேர் விடுதலையை எதிர்த்தும், அதிகாரிகள் மீதான நடவடிக்கையை ரத்து செய்யவும் கோரி மாவட்ட ஆட்சியர் சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுவை விசாரித்த நீதிபதி புகழேந்தி, பி.ஆர்.பழனிச்சாமி உள்ளிட்ட 3 பேரை விடுதலை செய்த உத்தரவு, ஐஏஎஸ் அதிகாரி, அரசு வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மேலூர் நீதித்துறை நடுவர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
Next Story