தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் - ரஜினி வழக்கறிஞர் விசாரணை ஆணையத்தில் ஆஜர்?
தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் சார்பில் அவரது வழக்கறிஞர் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜர் ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2018 மே 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது. அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிசூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை நடத்தி வருகிறார்.இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூற நடிகர் ரஜினிகாந்த் சென்றார். அப்போது சமூக விரோதிகள் புகுந்ததால் கலவரம் ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார். இதுதொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு ரஜினிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதனிடையே நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ரஜினி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரஜினி தரப்பில் அவரது வழக்கறிஞர் இளம்பாரதி இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜராவர் என தெரிகிறது.
Next Story