திருச்சியில் ஊராட்சி மன்ற தலைவி மீது தாக்குதல் - தாக்கியவர்களை கைது செய்யக்கோரி உள்ளிருப்பு போராட்டம்
திருச்சி அருகே ஊராட்சி மன்ற தலைவியை தாக்கியவர்களை கைது செய்யக் கோரி உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட முடிகண்டம் ஊராட்சி மன்ற தலைவியாக உள்ளவர் ஜான்சி திவ்யா. திருமலைசமுத்திரம் குளத்தில் இருந்து வட்டச் சாலைக்கு ஆட்சியர் அனுமதியுடன் சிலர் மணல் எடுத்து லாரியில் கொண்டு சென்றுள்ளனர். இந்நிலையில், அ.தி.மு.க வை சேர்ந்த மூக்கன் மற்றும் கஸ்துரி கருப்பையா உள்ளிட்ட சிலர் அந்த லாரியை மறித்து பணம் கேட்டு தகராறு செய்துள்ளனர். அவ்வழியாக வந்த ஜான்சி திவ்யா அதுகுறித்து விசாரித்து உள்ளார். கணவர் சகாயராஜூடன் வந்த ஜான்சி திவ்யாவை , மூக்கன் மற்றும் அவருடன் வந்தவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தங்களை தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தாக்கியவர்களை கைது செய்யக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த ஜான்சி திவ்யா, மக்கள் பிரதிநிதிகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லை என புகார் தெரிவித்துள்ளார்.
Next Story