பாலியல் வன்முறை தடுப்பு விழிப்புணர்வு மாரத்தான் - வாடகை குழந்தையுடன் பிச்சை எடுத்த பெண் கைது

வாடகைக்கு குழந்தையுடன் பிச்சை எடுத்து கொண்டிருந்த பெண் மாவட்ட ஆட்சியரிடம் கையும் களவுமாக அகப்பட்ட சம்பவம் வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடைபெற்றுள்ளது.
x
பாலியல் வன்கொடுமையால் பெண்கள் மற்றும் குழந்தைகள் 
பாதிக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கும் நிலையில், குழந்தைகளின் ஆபாச படங்களை பகிர்வு மற்றும் பதிவேற்றம் செய்வோர் குறித்த அதிர்ச்சி தகவலும் சமீபத்தில் வெட்ட வெளிச்சமாகியது... 

மழலை மாறா சின்ன சிறு குழந்தைகள், இது போன்று வன் கொடுமையில் சிக்காமல் தடுப்பது குறித்தும்  குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன் கொடுமைக்கு கண்டித்தும் மாராத்தான் ஓட்டம் வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடைபெற்றது...

மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கொடியசைத்து தொடங்கி 
இந்த மாராத்தான் ஓட்டம் நடைபெற்று கொண்டிருந்த இடத்தில் பெண் ஒருவர் குழந்தையுடன் பிச்சை எடுத்து கொண்டிருந்தார். 

இதை பார்த்த ஆட்சியர் அந்த பெண்ணை பிடித்து விசாரித்ததில், திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியானது.

ஆந்திரா மாநிலம் புத்தூரை சேர்ந்த அந்த பெண்ணின் பெயர் 
மல்லேஸ்வரி என்பதும், வாடகைக்கு குழந்தை எடுத்து வந்து 
பிச்சை எடுப்பதும் தெரியவந்தது....

இதையடுத்து, ஆட்சியரின் உத்தரவின் பேரில்
அந்த பெண் கைது செய்யப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். 

குழந்தைகள் நலன் கருதி மாராத்தான் நடைபெற்ற அதே இடத்தில் குழந்தையை வாடகைக்கு எடுத்து வந்து பெண் ஒருவர் பிச்சை எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்