மதுரை அருகே கவுன்சிலர் மீது தாக்குதல் : கவுன்சிலர் உள்ளிட்ட 3 பேர் மருத்துவமனையில் அனுமதி
வீட்டு வாசலில் பேசிக் கொண்டிருந்த கவுன்சிலர் மற்றும் அவரின் உறவினர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்தி விட்டு தப்பியோடிய 15 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் மையிட்டான்பட்டி ஊராட்சி வார்டு உறுப்பினராக, பாண்டியம்மாள் என்பவர் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில், தனது கணவர் ஞானசேகரன் மற்றும் உறவினர்கள் ஆறுமுகம், சேகர் ஆகியோருடன் நேற்றிரவு 8 மணியளவில் வீட்டு வாசலில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது 3 கார்களில் வந்த 15-க்கும் மேற்பட்டோர் கொண்ட மர்ம கும்பல் 3 பேரையும் அரிவாள் மற்றும் அம்புகளால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பியோடி உள்ளனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த 3 பேருக்கும் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக 3 பேரும், தற்போது அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இச்சம்பவம் குறித்து கள்ளிக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story