பைக் ரேஸில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை
2019ஆம் ஆண்டு நடைபெற்ற விபத்து, அதனால் ஏற்பட்ட உயிரிழப்பு, விதிமீறல் ஆகியவற்றின் புள்ளி விவரங்களை வெளியிட்டனர்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்து போலீசார், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற விபத்து, அதனால் ஏற்பட்ட உயிரிழப்பு, விதிமீறல் ஆகியவற்றின் புள்ளி விவரங்களை வெளியிட்டனர். அதில், 2019 ஜனவரி முதல், டிசம்பர் வரை மது அருந்தி வாகனம் ஓட்டியதாக 50 ஆயிரம் பேர் மீது வழக்கு உள்ளதாகவும், மதுஅருந்தி வாகனம் ஓட்டிய மற்றும் விதிமீறலில் ஈடுபட்ட, ஒரு லட்சத்து 30 ஆயிரத்து 559 பேரின், ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்துள்ளதாகவும் கூறினர். குறிப்பாக, அதிவேகமாக வாகனம் ஓட்டிய புகாரில், 73 ஆயிரம் பேரின் ஓட்டுனர் உரிமம் ரத்து என சுட்டிக்காட்டினர். 2019-ல் மட்டும் ஆறாயிரத்து 832 விபத்துகள் நடைபெற்றதாகவும், அதில், ஆயிரத்து 224 பேர் உயிரிழந்ததாகவும் கூறிய போலீசார், 2018 ஆம் ஆண்டைவிட விபத்து குறைந்துள்ளது என்றனர். குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதில், 2017-ல் 27 ஆயிரம் பேரும், 2018-ல் 40 ஆயிரம் பேரும், 2019-ல் 51 ஆயிரத்து 900 பேர் மீதும் வழக்குப் பதிந்துள்ள தகவலை வெளியிட்டனர். 2019ஆம் ஆண்டு மட்டும் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டோரிடம் இ-சலான் முறையில் 29 கோடியே 80 லட்சம் ரூபாய் வசூல் ஆனதாகவும் தெரிவித்த போலீசார், 2020 ஆண்டு பிறப்பின் போது, மதுகுடித்துவிட்டு வாகனம் ஓட்டுவோரின், ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும், ரேஸ் ஒட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.
Next Story