தமிழகத்தின் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
தீபாவளி பண்டிகைக்காக அரசு அதிகாரிகள் வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக புகார் எழுந்ததை அடுத்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டையில் லஞ்சம் ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை
புதுக்கோட்டை மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 4 மணி நேரம் வரை நடைபெற்ற இந்த சோதனையில் கணக்கில் வராத 1 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து பத்திரப் பதிவு அலுவலர்கள் உள்ளிட்ட வர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தினர்.
திருவெறும்பூறில் லஞ்சம் ஒழிப்பு போலீசார் சோதனை
திருச்சி திருவெறும்பூர் பத்திரபதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 5 மணிநேரம் நீடித்த இந்த சோதனையில் கணக்கில் வராத 1லட்சத்து 67ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.
ஊட்டியில் லஞ்சம் ஒழிப்பு போலீசார் சோதனை
ஊட்டியில் வேளாண்மை அலுவலகத்தில் லஞ்சம் ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் கணக்கில் வராத 67 ஆயிரம் ரூபாய் சிக்கியது. வேளாண்மை உதவி இயக்குநர் சிவக்குமார் மற்றும் நிர்வாக இயக்குநர் சுப்புரமணி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தினர்.
சத்தியமங்கலத்தில் லஞ்சம் ஒழிப்பு போலீசார் சோதனை
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை நடத்தினர். விவசாயிகளுக்கு வழங்கப்படும் தட்கல் மின் இணைப்பு திட்டத்தில் அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக கிடைத்த தகவலையடுத்து இந்த சோதனை நடைபெற்றது. இதில் கணக்கில் வராத 89 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story