திருச்சி : கனமழை-சாலைகளில் வெள்ளம்
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம், கண்டோன்மென்ட், சத்திரம் பேருந்துநிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ததால், சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம், கண்டோன்மென்ட், சத்திரம் பேருந்துநிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ததால், சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் சிரமத்திற்கு உள்ளாயினர். இதேபோல் திருச்சி புறநகர் பகுதிகளான சமயபுரம், மண்ணச்சநல்லூர், லால்குடி இடங்களில் மிதமான மழை பெய்தது.
காஞ்சிபுரம் : பலத்த மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி
காஞ்சிபுரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. வடகிழக்கு பருவமழை தாக்கம் காரணமாக, காஞ்சிபுரம், ஓரிக்கை, செவிலிமேடு, வாலாஜாபாத் ,ஒரகடம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது, இதனால் தாழ்வான பகுதிகளிலும் , சாலைகளிலும் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
மாமல்லபுரத்தில் கனமழை-போக்குவரத்து பாதிப்பு
மாமல்லபுரத்தில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் நகரின் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மழை காணமாக சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்ததால் புராதன சின்னங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.
தஞ்சையில் 4 மணி நேரத்துக்கும் மேலாக கொட்டி தீர்த்த கன மழை
தஞ்சையில், வல்லம், சூரக்கோட்டை, பள்ளி அக்ரஹாரம் உள்ளிட்ட பகுதிகளில் 4 மணி நேரத்திற்கும் மேல் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சம்பா சாகுபடி பணிகள் நடைபெற்று வரும் இந்த மழை மிகவும் உபயோகமாக இருக்கும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மதுரையில் காற்றுடன் கூடிய கனமழை விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி
மதுரையில், திருப்பரங்குன்றம், பெருங்குடி, வலையங்குளம், சின்ன உடைப்பு உள்ளிட்ட பகுதிகளில் 1 மணி நேரத்திற்கு மேல் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. வேளாண் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், தற்போது பெய்து வரும் மழை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
நாமக்கல் : கனமழை-தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ,வெண்ணந்தூர், நாமகிரிபேட்டை உள்ளிட்ட இடங்களில் கன மழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக தாழ்வான பகுதியில் மழை நீர் தேங்கியது. ராசிபுரம், பட்டணம், புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நிலக்கடலை அறுவடை தொடங்கியுள்ள நிலையில், கனமழையால் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
தேனி : இடி, மின்னலுடன் கனமழை-விவசாயிகள் மகிழ்ச்சி
தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காணமாக குளம், ஏரி உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். பருவமழை தொடங்கியுள்ளதால் வடுகப்பட்டி, தேவதானப்பட்டி, கும்பக்கரை உள்ளிட்ட பகுதிகளில் நெல் விதைப்பு மற்றும் நடவு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
வேலூர் : கனமழை-பொதுமக்கள் மகிழ்ச்சி
வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டை, வாலாஜாப்பேட்டை, ஆற்காடு உள்ளிட்ட பகுதிகளில் 4 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து கனமழை கொட்டியது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் சிரமத்திற்கு உள்ளாயினர்.
திருவண்ணாமலை : இடியுடன் கூடிய கனமழை-விவசாயிகள் மகிழ்ச்சி
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, கண்ணமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் இணைப்பு துண்டிக்கபட்டதால் பல கிராமங்கள் இருளில் மூழ்கின.
Next Story