தூத்துக்குடி : 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் - 4 இளைஞர்கள் போக்சோ சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 4 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் உள்ள காட்டுப் பகுதியில் சிறுமி ஒருவரின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. சத்தம் கேட்டு பதறிய, அப்பகுதியில் ஆடுமேய்ப்போர், சத்தம் வந்த பகுதியை நோக்கிச் சென்றதில், மயங்கிய நிலையில், சிறுமி ஒருவரை மீட்டனர். இந்த தகவலின் பேரில் வந்த போலீசார், அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். மயக்கம் தெளிந்த நிலையில், நட்பு, வினையானது குறித்து அவர் அளித்த தகவல், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த 17 வயதான அந்த சிறுமி, தூத்துக்குடி பகுதியில் உள்ள இறால் பண்ணையில் வேலை பார்த்து வந்ததையும், உடன் பணியாற்றியவனே, நண்பர்களுடன் சேர்ந்து தம்மை பாலியல் வன்கொடுமை செய்தது குறித்தும் பகீர் தகவலை போலீசாரிடம் கூறியுள்ளார். உடன் வேலைபார்த்த அழகுராஜா, சுரேஷ்குமார் ஆகியோர் தம்முடன் நெருங்கிப் பழகியதாகவும், அதை நம்பி அவர்களுடன் சென்ற போது, அவர்களது நண்பர்கள் ராமச்சந்திரன, ராமலிங்கம் ஆகியோருடன் சேர்ந்து தம்மை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அதிரவைத்துள்ளார். உடனடியாக வழக்கு பதிவு செய்த மகளிர் போலீசார், நால்வரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட அவர்கள், 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.
Next Story