சென்னை பல்லாவரத்தில் ஹவில்தார் சுட்டுக்கொலை, சுட்டுக்கொன்ற ரைபில்மேனும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

சென்னை பல்லாவரம் ராணுவ குடியிருப்பில் ஹவில்தாரை, ரைபில்மேன் சுட்டுக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
x
சென்னை பல்லாவரம் ராணுவ குடியிருப்பில் தங்கியுள்ள உத்தராகண்ட் மாநிலத்தை சேர்ந்த ஹவில்தார் பிரவீன் குமார் ஜோஷிக்கும், அவருக்கு கீழ் பணியாற்றி வரும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த  ஜெக்சீருக்கும் இடையே நேற்றிரவு பணியின் போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பிரவீன் குமார் ஜோஷி, ராணுவ பணி விதிப்படி, சிறிய வகையான தண்டனையை  ரைபிள் மேன் ஜெக்சீருக்கு அளித்துள்ளார். இதனால் மனமுடைந்த ஜெக்சீர் பதற்றமான நிலையிலேயே காணப்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில், அதிகாலை 3 மணிக்கு பிரவீன் குமார் ஜோஷி தூங்கிக் கொண்டிருந்த அறைக்கு சென்ற ஜெக்சீர், தனது துப்பாக்கியால் அவரை சுட்டுக் கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். துப்பாக்கி சத்தம் கேட்டு வந்த மற்ற வீரர்கள் அங்கு ஓடி வந்து பார்த்த போது இருவரும் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த ராணுவ போலீசார், இருவரது உடலையும் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக, நந்தம்பாக்கத்தில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்