ப. சிதம்பரம் - அரசியல் பயணம்

தமிழ்நாட்டில் இருந்து சென்று டெல்லியின் அதிகார மையத்தில் அதிகபட்ச உயரத்தை அடைந்தவர் ப.சிதம்பரம்.
ப. சிதம்பரம் - அரசியல் பயணம்
x
1945 செப்டம்பர் 16 ஆம் தேதி சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தானில் பிறந்த சிதம்பரம், தமிழ்நாட்டின் கல்வி, இசை, வணிக வரலாற்றில் அழியாத முத்திரை பதித்த அண்ணாமலை செட்டியாரின் மகள் வழிப் பேரன். சென்னை லயோலா கல்லூரி, சென்னை பல்கலைக்கழகம், சென்னை சட்டக்கல்லூரி ஆகியவற்றில் பயின்ற சிதம்பரம் தொழில்முறை வழக்குரைஞர். அமெரிக்காவில் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. பயின்றவர். உச்சநீதிமன்றத்திலும், இந்தியாவின் பல உயர்நீதிமன்றங்களிலும் வழக்குரைஞராகப் பணியாற்றியவர். இவரது மனைவி நளினியும் வழக்குரைஞர்.இவரது மகன் கார்த்தி தற்போது சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினராக உள்ளார். இதற்கு முன்பு 7 முறை மக்களவை எம்.பி.யாக இருந்துள்ள சிதம்பரம், தற்போது மாநிலங்களவை உறுப்பினர்.1972-ஆம் ஆண்டிலேயே அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக இருந்த, சிதம்பரம் பிறகு தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவராக 3 ஆண்டுகள் பணியாற்றினார். 1984 ல் முதல்முறை மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிதம்பரம், 1985-ல் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது மத்திய வணிகத்துறை துணை அமைச்சராக இருந்தார். இதுதான் இவரது அமைச்சரவைப் பயணத்தின் முதல் படி.பிறகு பணியாளர் நலன், நிர்வாக சீர்திருத்தம், மக்கள் குறைதீர்வு துணை அமைச்சராக, துறை மாற்றம் பெற்றார். நீண்ட காங்கிரஸ் பாரம்பரியம் உடையவராக இருந்தாலும், அவர் முதல் முதலில் மத்திய கேபினட் அமைச்சராக ஆனது, காங்கிரசுக்கு எதிராக 1996 ல் தேவகவுடா தலைமையில் அமைக்கப்பட்ட ஐக்கிய முன்னணி அரசில்தான். ராஜீவ்காந்தி கொல்லப்பட்டபோது தமிழக சட்டப் பேரவைக்கும், இந்திய நாடாளுமன்றத்துக்கும் ஒரே சமயத்தில் தேர்தல் நடந்தது. அதில் காங்கிரசும், ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவும் அமோக வெற்றி பெற்றன. தமிழ்நாட்டில் ஜெயலலிதா முதலமைச்சரானார். மத்தியில் பி.வி.நரசிம்மராவ் பிரதமரானார். ஆனால், தமிழ்நாடு காங்கிரசாரை அதிமுக அவமதிப்பதாக அந்தக் கட்சிக்குள் புகைச்சல் இருந்துவந்தது. அத்துடன் 1991-96 அதிமுக ஆட்சி மக்களின் அதிருப்தியையும் பெற்றிருந்தது. எனவே,1996 பொதுத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறவேண்டும் என்று தமிழக காங்கிரசுக்குள் குரல்கள் எழுந்தன. ஆனால், அதைப்பற்றி கவலைப்படாமல் காங்கிரசின் மத்தியத் தலைமை அதிமுக-வுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துவிட்டது. இதனால், தமிழகத்தின் செல்வாக்குமிக்க காங்கிரஸ் தலைவரான மூப்பனார் தலைமையில் பெருமளவு காங்கிரசார் அந்தக் கட்சியில் இருந்து பிரிந்துவந்து தமிழ் மாநிலக் காங்கிரஸ் என்ற கட்சியைத் தொடங்கி திமுக-வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டனர். அந்தக் கட்சியில் மூப்பனாருக்கு அடுத்தபடியாக முக்கியத் தலைவரானார் சிதம்பரம். இது அவரது அரசியல் வாழ்வில் மிக முக்கியத் திருப்பு முனையானது.அந்தக் கூட்டணி தமிழகத்தில் பெரும் வெற்றி பெற்றது. இந்திய அளவில் காங்கிரசுக்கும், பாஜக-வுக்கும் மாற்று அணியாக உருவெடுத்த, ஐக்கிய முன்னணி, தேவகவுடா தலைமையில் மத்தியில் ஆட்சியைப் பிடித்தது. அந்த அரசில்தான் சிதம்பரம் முதல் முறையாக கேபினட் அமைச்சராகி நிதித்துறைக்குப் பொறுப்பேற்றார். அதிமுக கூட்டணியை எதிர்த்து தொடங்கப்பட்ட தமிழ் மாநிலக் காங்கிரஸ் வேறொரு கட்டத்தில் அதிமுக-வுடனேயே கூட்டணி வைத்தபோது அதை எதிர்த்து தமிழ்மாநில காங்கிரசில் இருந்து வெளியேறி காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை என்ற கட்சியைத் தொடங்கினார். அதன் சார்பில், 2004 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் எம்.பி. ஆனார். அந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மன்மோகன் சிங் தலைமையில் ஆட்சி அமைத்தபோது அந்த அரசில் நிதித்துறைக்கான கேபினட் அமைச்சராகப் பொறுப்பேற்றார். பிரதமராக இருந்த மன்மோகன் சிங்குக்கு அடுத்தபடியாக ஆட்சியில் அதிக அதிகாரமிக்கவராகவும் சிதம்பரம் இருந்தார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை இழந்த 2014 வரையிலான 10 ஆண்டு காலம் தொடர்ந்து கேபினட் அமைச்சராக அதிகாரம் மிக்க பல துறைகளை கவனித்தார். அவற்றில் முக்கியமானவை உள்துறையும், நிதித்துறையும். இந்த பத்தாண்டுகள்தான் அவரது அரசியல் வாழ்வு உச்சத்தை எட்டிய காலம். அதே பத்தாண்டுகளில்தான் அவரது அரசியலை ஆட்டிப் பார்க்கும் பல சர்ச்சைகளுக்கும் உள்ளானார். ஐ.என்.எக்ஸ். வழக்கு தவிர, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் அரசுக்கு சொந்தமான ஏர்இந்தியா நிறுவனத்துக்கு விமானம் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக நடக்கும் வழக்கிலும் சிதம்பரம் விசாரிக்கப்படுகிறார். சிறந்த மேடைப் பேச்சாளர், பொருளாதார வல்லுநர் வழக்குரைஞர், நிர்வாகி, என்று பெயர் பெற்ற சிதம்பரம், பண மதிப்பு இழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி அறிவித்தபோது அதைப் பற்றி புள்ளி விவரங்களோடு கடுமையாக விமர்சித்தார். மீண்டும் இரண்டாவது முறையாக மோடி தலைமையிலான மத்திய அரசு பதவி ஏற்றது முதல் சிதம்பரம் மீதான பல வழக்குகளில் நடவடிக்கைகள் வேகமெடுக்கின்றன. இந்த வழக்குகளின் போக்கு சிதம்பரத்தின் அரசியல் வாழ்வையே தீர்மானிக்கும் என்று எதிர்பார்க்கப்பகிறது.

Next Story

மேலும் செய்திகள்