"பெண் எஸ்.ஐ-க்கு பாலியல் தொல்லை - டிஎஸ்பி பணியிடை நீக்கம்"

பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகார் உறுதி செய்யப்பட்டதால் டிஎஸ்பி ஓய்வு பெற இருந்த நாளில் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்
x
நாகையில் நில அபகரிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தவர் வெங்கட்ராமன்.  இவர், கடந்த 2015 ஆம் ஆண்டு திருச்சி மாநகர காவல் நுண்ணறிவு பிரிவில் உதவி ஆணையராக  பணியாற்றினார்.

அப்போது, திருச்சியில் பணியாற்றிய பெண் காவல் உதவி ஆய்வாளர் ஒருவருக்கு  போன் மூலம் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆபாச வார்த்தைகளால் பேசி பாலியல் தொந்தரவு கொடுத்த வெங்கட்ராமன் மீது காவல்துறை உயர் அதிகாரிகளிடம் அந்த பெண் எஸ்.ஐ புகார் அளித்திருந்தார். இதனால், டி.எஸ்.பி., வெங்கட்ராமன் நாகர்கோவிலுக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். மேலும் அவர் மீது துறை ரீதியான விசாரணைக்கு காவல்துறை உயரதிகாரிகள் உத்தரவிட்டனர். 

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல் நடத்தி வந்த தொடர் விசாரணையில், பெண் எஸ்.ஐ-க்கு டி.எஸ்.பி வெங்கட்ராமன் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.  இது தொடர்பான அறிக்கை தமிழக காவல்துறை டி.ஜி.பி-க்கு அனுப்பப்பட்டது. பெண் எஸ்.ஐ- க்கு பாலியல் தொந்தரவு அளித்த டி.எஸ்.பி வெங்கட்ராமனை பணியிடை நீக்கம் செய்ய டிஜிபி உத்தரவிட்டார். அதன் பேரில், டி.எஸ்.பி வெங்கட்ராமன் நேற்று பணி ஓய்வு பெற இருந்த நாளில் அவரை பணியிடை நீக்கம் செய்து தமிழக உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி நடவடிக்கை எடுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்