தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் நியமனத்திற்கு, உயர்நீதிமன்றம் விதித்த தடை நீக்கம் - உச்சநீதிமன்றம்
தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் நியமனத்திற்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை விதித்த இடைக்கால தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் லோக் ஆயுக்தா உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட ராஜாராம் மற்றும் ஆறுமுகம் ஆகியோரின் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. ஏற்கனவே வேறு பணிகளில் இருப்பதால், இருவரும் விதிகளை மீறி நியமிக்கப்பட்டதாக கூறி, எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராஜாராம் மற்றும் ஆறுமுகம் ஆகியோரின் நியமனத்திற்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்காலத் தடை விதித்தது.
இதையடுத்து, இந்த இடைக்கால தடை உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. விசாரணையின் போது, இடைக்கால தடை நியாயமில்லை என்றும்,
நியமனத்துக்கு முன்னரே தமிழ்நாடு பணியாளர் தேர்வணைய உறுப்பினர் பதவியை ராஜாராம் ராஜினாமா செய்துவிட்டதாகவும் அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. மேலும், லோக் ஆயுக்தா போன்ற அரசு அமைப்புகளில் நியமிக்கப்படுவர்களின் பணி, அரசின் கீழ் வரும் பணி என கருத முடியாது என்றும் அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. தொடர்ந்து, இந்த தடை காரணமாக தான் லோக் ஆயுக்தா செயல்படவில்லை என்றும் அரசு தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. விசாரணையை அடுத்து, தமிழ்நாடு லோக் ஆயுக்த உறுப்பினர் நியமனத்துக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை விதித்த இடைக்கால தடையை நீக்கி, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
Next Story