சூர்யாவின் குரலுக்கு ஆதரவு குரல் எழுப்பிய ரஜினி ...

புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாக நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துக்கு அரசியல் தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் சர்ச்சை சூடுபிடித்தது.
சூர்யாவின் குரலுக்கு ஆதரவு குரல் எழுப்பிய ரஜினி ...
x
புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாக நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துக்கு அரசியல் தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் சர்ச்சை சூடுபிடித்தது. சூர்யாவின் கருத்துக்கு ஏற்கனவே கமல்ஹாசன், சீமான் ஆதரவு கரம் நீட்டிய  நிலையில், தற்போது ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார். அண்மையில் அகரம் பவுண்டேஷன் நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா, புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டால் கிராமப்புற மாணவர்கள் கல்வியில் புறக்கணிக்கப்படுவார்கள் என தனது வேதனையை வெளிப்படுத்தினார். 

புதிய கல்விக் கொள்கை பற்றி அரைகுறையாக அறிந்து, சூர்யா பேசுவதாக அமைச்சர் கடம்பூர் ராஜு கடுமையாக விமர்சனம் செய்தார். பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை, அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்களும் சூர்யாவின் கருத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க இந்த விவகாரம் சூடுபிடித்தது. இதையடுத்து, கமல்ஹாசன், சீமான், அன்புமணி ராமதாஸ், தினகரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் சூர்யாவின் கருத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். ஏழை மாணவ மாணவியரின் கல்வி மேம்பாட்டிற்காக தம்பி சூர்யா மற்றும் அவரது குடும்பத்தார் பல வருடங்களாக உதவி செய்து வரும் நிலையில், கல்வி குறித்து பேச சூர்யாவுக்கு முழு உரிமை உள்ளது என அறிக்கை மூலம் ஆதரித்தார், கமல்ஹாசன். 

அதன் தொடர்ச்சியாக, வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் காமராஜர் நூற்றாண்டு அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற விழாவில் பேசிய கமல்ஹாசன், அனைவருக்கும் கல்வி என்ற காமராஜர் கனவை கலைத்துவிட கூடாது, ஒரு சிலருக்கு மட்டுமே கல்வி என்ற நிலையை உருவாக்கிவிட கூடாது என வலியுறுத்தினார். கிராமத்து மாணவனை ஒதுக்கும் முயற்சியே புதிய கல்விக் கொள்கை என கூறிய, தமிழ்நாடு இயக்குனர் சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி, சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஆதரவு ஒருபுறம், எதிர்ப்பு மறுபுறம் இருக்க, புதிய கல்வி கொள்கை குறித்து நடிகர் சூர்யா தெரிவித்த கருத்து தமக்கு தெரியாது என கருத்து சொல்லாமல் சில திரைத்துறை பிரபலங்கள் நழுவினர்.

சமமான கல்வி இல்லாதபோது ஒரே தேர்வு முறை ஏற்புடையது இல்லை என கூறிய சீமான்,  சூர்யாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். சமகாலத்தில் என்ன நடக்கிறது என தெரியாமல் திரையில் கருத்து சொல்வது ஏமாற்றுவேலை என்று இயக்குநர் சங்கரை கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த சூழலில், சென்னையில் நடைபெற்ற காப்பான் பட பாடல் வெளியீட்டு விழாவிலும் புதிய கல்விக் கொள்கை குறித்த சூர்யாவின் குரலுக்கு ஆதரவு குரல் ஒலித்தது. 

திரைத்துறையில் வேலை செய்வதற்கு சம்பளம் வாங்குகிறோம் என்பதோடு இருக்காமல் தனக்கு சமூக அக்கறை உண்டு என சூர்யா செயல்பட்டதாக கவிஞர் வைரமுத்து வாழ்த்து தெரிவித்தார். அதற்கு அதே விழாவில் பதிலளித்து பேசிய ரஜினிகாந்த், சூர்யாவின் இன்னொரு முகம் சில நாட்களுக்கு முன் வெளிப்பட்டதாக பாராட்டியதோடு, அவரின் கருத்தை ஆமோதிப்பதாக குறிப்பிட்டார். தாம் பேசினால் மோடிக்கு கேட்டிருக்கும் என சொன்னார்கள், சூர்யா பேசியது மோடிக்கு கேட்டுள்ளது என்றும் மாணவர்கள் படும் கஷ்டங்களை கண்எதிரே பார்த்து, அவர்களுக்கு பல உதவிகளை செய்து வருபவர் சூர்யா என்றும் பாராட்டினார். நதிநீர் இணைப்பு உட்பட மத்திய அரசின் பெரும்பாலான திட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து வரும் ரஜினிகாந்த், புதிய கல்விக் கொள்கை விவகாரத்தில் என்ன சொல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த சூழலில் சூர்யாவின் கருத்தை ஆதரித்து ரஜினிகாந்த் பேசியிருப்பது, அடுத்த கட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்