டெல்லியில் கைது செய்யப்பட்ட 14 பேர் யார்...? அவர்கள் திட்டங்கள் என்ன ?...

டெல்லியில் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட 14 பேர் யார்...? அவர்கள் இதுவரை எங்கிருந்தார்கள்...? நாட்டில் நாச வேலையை நிகழ்த்த நிதி திரட்டிய, பரபரப்பான பின்னணி தகவல்களை விவரிக்கிறது இந்த தொகுப்பு...
x
இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட, 'அன்சாருல்லா' என்ற அமைப்பின் கீழ், ஒரு குழுவாக இணைந்து சிலர் நிதி திரட்டுவதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுக்க, தீவிர விசாரணையில் இறங்கியது, என்.ஐ.ஏ. சென்னை மற்றும் நாகையில் என்.ஐ.ஏ. அதிகாரிகளின் சோதனை ஆரம்பமானது. சென்னை வேப்பேரி அடுத்த பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் சையது முகமது புகாரி என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இவர், 'வஹிதத்தே இஸ்லாமி ஹிந்த்' என்ற அமைப்பின் தலைவராக இருக்கிறார். மண்ணடி லிங்கி செட்டி தெருவில் உள்ள அவரது அலுவலகத்திலும் விசாரணை நடத்தப்பட்டது. 

அதே நேரம், நாகையில் அசன் அலி மற்றும் ஹாரிஸ் முஹம்மது என்பவர்களிடம் கடந்த சனிக்கிழமை என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, செல்போன், சிம்கார்டு, லேப்-டாப் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதனையடுத்து, சையது முகமது புகாரி, அசன் அலி, ஆரிஸ் முகம்மது ஆகியோர் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் என்.ஐ.ஏ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானதாக தெரிகிறது. 

'அன்சாருல்லா' என்ற அமைப்பை உருவாக்கி அந்த அமைப்பிற்கு ஆட்களை திரட்டி வந்தது விசாரணையில் தெரிய வந்தது. இந்நிலையில், அசன் அலி மற்றும் ஆரிஸ், என்.ஐ.ஏ. அதிகாரிகளால், சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டு பின்னர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே, அன்சாருல்லா அமைப்பிற்கு நிதி திரட்டிய புகாரில், டெல்லியில் 14 பேரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். சையது முகமது புகாரி, அசன் அலி, ஆரிஸ் முகம்மது ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. 14 பேரும் ஐக்கிய அரபு அமீரக சிறையில் இருப்பது தெரிய வர, இந்தியாவின் தூதரக நடவடிக்கையின் மூலம் அவர்கள் நாடு கடத்தப்பட்டனர். டெல்லி விமான நிலையத்தில் 14 பேரையும் கைது செய்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் விமானம் மூலம் சென்னை அழைத்து வந்தனர். 14 பேரையும் 25-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க, பூந்தமல்லியில் உள்ள என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்தியாவில் நாச வேலையை நடத்த ஐக்கிய அரபு அமீரகத்தில் நிதி திரட்டும் பணியை இவர்கள் மேற்கொண்டதாக 14 பேர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்புடன் தொடர்புடைய மேலும் பலர் உள்ளதாகவும், அவர்களை சுற்றி வளைக்கும் பணியிலும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் களமிறங்கி உள்ளதாக கூறப்படுகிறது. நாட்டில் நாச வேலைகளை நிகழ்த்த திட்டமிட்டதாக அடுத்தடுத்து தொடரும் கைது நடவடிக்கை, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்