ஈரோடு : சொத்துக்காக தாய், மகள் எரித்து கொலை... தீ வைத்து உறவினர்களே கொன்ற அவலம்

ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியில், சொத்துக்காக தாய் மற்றும் மகளை உறவினர்களே குடிசையில் வைத்து எரித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு : சொத்துக்காக தாய், மகள் எரித்து கொலை... தீ வைத்து உறவினர்களே கொன்ற அவலம்
x
ஈரோடு, சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் உள்ள மல்லன்குழி கிராமத்தை சேர்ந்தவர் ராஜம்மாள். இவருக்கு மாதேவபிரசாத் என்ற மகனும், கீதா என்ற மகளும் உள்ளனர். இவரது கணவர் நாகண்ணா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு  இறந்த நிலையில், ராஜம்மாள் விவசாயக் கூலி வேலை செய்து தனது குடும்பத்தை கவனித்து வந்தார். ராஜம்மாள் தனது மகள் மற்றும் மகனுடன் அதே ஊரில் உள்ள அவரது தாய், தந்தை வீட்டில் வசித்து வந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்னரே அதே ஊரில், ஒதுக்குப்புறமாக உள்ள தனது இடத்தில் தனியாக குடிசை அமைத்து குடியேறினார். ராஜம்மாளின் மகன் மாதேவபிரசாத் கடந்த 3 தினங்களுக்கு முன்பு கேரளாவிற்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். 
 
இந்நிலையில் நேற்று காலை ராஜம்மாவின் குடிசை வீடு முற்றிலும் தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் ராஜம்மாள், கீதா இருவரும் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். தகவலறிந்து வந்து போலீசார் பார்த்தபோது, உடல்கள் தீயில் கருகிய நிலையில் இருந்ததால், சம்பவ இடத்திலேயே இருவரது உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இது குறித்து விசாரித்து வந்தனர். விசாரணையின் போது தான், ராஜம்மாளின் 2 ஏக்கர் நிலத்தையும், அவரது வீட்டுமனையையும் அபகரிப்பதற்காக ராஜம்மாளின் தாய், தந்தை மற்றும் கணவரின் உறவினர்களே, இருவரையும் கொன்ற சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. குடிசையில் தீயை வைத்து கொன்று விட்டு, அதை தீ விபத்து என்று கூறி நாடகமாடியது அம்பலமானது..  

இதையடுத்து, ராஜம்மாளின் தந்தை சிக்குமாதே கவுடா, தாய் சிவமல்லம்மா, மாமியார் தொட்டமாதம்மா, கணவரின் சகோதரி மாதேவம்மா, கணவரின் தம்பி லிங்கராஜ், லிங்கராஜின் மனைவி நாகரத்தினா, ராஜம்மாவின் தம்பி பீரேஸ் ஆகியோர் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, போலீசார் அவர்களை சத்தியமங்கலம்  குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். சொத்துக்காக உறவினர்களே திட்டமிட்டு, நாடகமாடி தாய், மகளை கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... 


Next Story

மேலும் செய்திகள்