டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு அறிவிப்புக்கு தடை கோரிய மனு - ஜூன் 26-க்குள் பதில் அளிக்க உத்தரவு
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வு அறிவிப்புக்கு தடை கோரிய மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், அரசு மற்றும் டி.என்.பி.எஸ்.சி. பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தாளர் உள்ளிட்ட ஆறாயிரத்து 491 குருப் - 4 பணியிடங்களுக்கான தேர்வு குறித்து தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம், ஜூன் 7ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. அதில் செப்டம்பர் முதல் தேதி எழுத்து தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த தேர்வுக்கு தடை விதிக்க கோரியும், தேர்வு குறித்த அறிவிப்பை ரத்து செய்யக் கோரியும், மதுரையைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
கடந்த 2013 ம் ஆண்டு ஐந்தாயிரத்து 566 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில், தேர்வானவர்களில் பலர் பணியில் சேராததாலும், பணியில் சேர்ந்த குறுகிய காலத்தில் பலர் விலகியதாலும், 450 முதல் 500 பணியிடங்கள் காலியாக இருப்பதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.
மேலும், இந்த காலியிடங்களுக்கு 2013 தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை நியமிக்காமல், அந்த பணியிடங்களுக்கும் சேர்த்து புதிதாக தேர்வு நடத்த அறிவிப்பு வெளியிட்டு உள்ளது, சட்ட விரோதமானது என மனுதாரர் சுட்டிக்காட்டி உள்ளார்.
இந்த மனு இன்று நீதிபதி பார்த்திபன் முன் விசாரணைக்கு வந்த போது, 2013 தேர்வில் ஏற்பட்ட காலியிடங்களை காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை நியமிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவை, டி.என்.பி.எஸ்.சி. கருத்தில் கொள்ளவில்லை எனவும்,
காலியிடத்தில் மனுதாரருக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார். வரும் 26 ஆம் தேதிக்குள் பதிலளிக்க, டி.என்.பி.எஸ்.சி. மற்றும் பணியாளர் நலத்துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்தைவைத்தார்.
Next Story