தரமற்ற குடிநீர் கேன்கள் விற்பனை புகார் எதிரொலி : சென்னையில் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை
சென்னையில் தரமற்ற குடிநீர் கேன்கள் விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து, அதிகாரிகள் இன்று பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தி உள்ளனர்.
சென்னை மாநகரத்தில் தரமற்ற, காலாவதியான குடிநீர் கேன்கள் விற்பனை செய்யப்படுவதாக அரசுக்கு புகார்கள் வந்தன. இதனைத் தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சென்னை கோயம்பேடு, கொளத்தூர், வேளச்சேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். கோயம்பேட்டில் நடைபெற்ற சோதனையில் பத்துக்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட தரமற்ற கேன்கள், சுகாதாரமற்ற தண்ணீர், உரிமம் காலாவதியானவை, முறையாக பெயர் பதிவு செய்யாத குடிநீர் கேன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். இதுவரை கோயம்பேட்டில் மட்டும் 550 குடிநீர் கேன்கள் பறிமுதல் செய்துள்ளதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாகனத்தை சோதனை செய்யும் அதிகாரிகள், குடிநீரை கேன்களில் நிரப்பும் இடத்தில் நேரடியாக சோதனை செய்தால், விதிமுறைகளை கடைபிடிக்காத நிறுவனத்தை சீல் வைக்கலாம் என்றும், வாடகை வாகனத்தை நிறுத்துவது முறையல்ல என சோதனைக்கு உள்ளான வாகன ஓட்டுநனர்கள் தெரிவித்துள்ளனர்.
Next Story