"வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு வந்ததில் எந்த பிரச்சினையும் இல்லை" - தேனி மாவட்ட ஆட்சியர்

கோவையில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனிக்கு கொண்டு வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து. திமுக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
x
தேனி தொகுதியில் பதிவான வாக்குகள் பொறியியல் கல்லூரி ஒன்றில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கோவையில் இருந்து லாரியில் பயன்படுத்தப்படாத மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தேனி வட்டாட்சியர்  அலுவலகத்திற்கு வந்தது. இது, அங்கிருந்த, பயன்படுத்தப்படாத இயந்திரங்களுடன் சேர்த்து வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. 

இதையறிந்த தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர், வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு வந்த மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கர் உள்ளிட்டோர் எதிர்கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 

இறுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறையின் சீல் உடைக்கப்பட்டு, கட்சியினரின் பிரதிநிதிகள் அழைத்துச் செல்லப்பட்டு, பரிசோதனை செய்யப்பட்டது. இருந்தாலும் மாவட்ட ஆட்சியரின் விளக்கத்தை ஏற்க மறுத்த கட்சியினர், வாக்குப்பதிவு இயந்திரத்தை திரும்ப எடுத்துச்செல்ல வலியுறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு ஏற்பட்டதை அடுத்து, கட்சியினர் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் 5 மணி நேரத்திற்கு மேலாக வட்டாட்சியர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்