முசிறி அருகே 2 குழந்தைகளுடன் தீக்குளித்து இறந்த தாய்...
முசிறி அருகே குடும்ப தகராறில் இரண்டு குழந்தைகளுடன் தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முசிறி அருகே குடும்ப தகராறில் இரண்டு குழந்தைகளுடன் தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் ஊருடையாபட்டி கிராமத்தில் வசிக்கும் கூலித்தொழிலாளி பன்னீர்செல்வம்-நாகராணி தம்பதிக்கு குணா, சந்தோஷ் என இரு மகன்கள் இருந்தனர். குடும்ப வறுமை காரணமாக நாகராணி வேலைக்கு சென்று வந்தார். அதை விரும்பாத கணவர் பன்னீர்செல்வம் அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இதனால் நாகராணி கடந்த இரு நாட்களாக மனஉளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. விரக்தியின் உச்சத்திற்கு சென்ற அவர், வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, இரு குழந்தைகளுடன் தீக்குளித்து, தற்கொலைக்கு முயன்றார். அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், நாகராணியையும், இரு குழந்தைகளையும் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, 3 பேரும் உயிரிழந்தனர். இது குறித்து தாத்தையங்கார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பயம் அறியா இளம் கன்றுகள் தாயுடன் மாண்டுபோன சோகம், அந்த கிராமமக்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
Next Story