மது போதை குற்றங்களுக்கு மாநில அரசு ஏன் பொறுப்பாக்க கூடாது? - உயர்நீதிமன்றம்

மதுபோதையில் நடக்கும் குற்றங்களுக்கு மாநில அரசை ஏன் பொறுப்பாக்க கூடாது என்பது குறித்து. வரும் ஏப்ரல் நான்காம் தேதிக்குள் விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
கோவையில், குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் 2 பேர் தற்கொலை செய்த  வழக்கில் வீராசாமி உட்பட இருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில்  முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். இருவருக்கும் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார். தமிழகத்தில், மாநில அரசே சொந்த மக்களுக்கு மதுபான கடை நடத்தி, விற்பனை செய்து அதன் மூலம் ஆண்டுக்கு 31 ஆயிரத்து 751 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுவதும், மாநில பொருளாதாரத்தில் ஐந்தில் ஒரு பங்கு வருமானம் மது விற்பனையால் கிடைப்பது என்பதும்  துரதிருஷ்டவசமானது என நீதிபதி வேதனை தெரிவித்தார்.  தேசிய சுகாதார பணிகள் துறை ஆய்வுபடி, 47 சதவீத ஆண்கள் மதுவுக்கு அடிமையாகி இருப்பதாகவும் நீதிபதி தனது உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளார். குடிபோதையில் விபத்துக்கள், சட்டம் - ஒழுங்கு பிரச்னை, கொலை, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதாக கவலை தெரிவித்த நீதிபதி, மது கொள்கையில் தமிழக அரசு மாற்றங்களை கொண்டு வராவிட்டால், இந்த குற்றச் சம்பவங்களில் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்யும் என சுட்டிக்காட்டி உள்ளார். மது போதையில் நடைபெறும் குற்றங்கள் அதிகரித்து வருவதை நீதிமன்றம் கண்மூடி வேடிக்கை பார்க்காது என்றும்,  மதுவை விற்கும் தமிழக அரசை இந்த குற்றச் சம்பவங்களுக்கு பொறுப்பாக்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார். இந்த குற்றச் சம்பவங்களில் மாநில அரசை குற்றத்திற்கு உடந்தையாக சேர்த்து தண்டனை விதிப்பதுடன் அபராதமும் விதிக்க முடியும் என தெரிவித்த நீதிபதி, இது தொடர்பாக விளக்கம் அளிக்கும் படி தமிழக அரசு உத்தரவிட்டு, விசாரணை ஏப்ரல் 4ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்