நிலக்கோட்டை அருகே 2 பேர் கள்ளச் சாராயம் குடித்து சாகவில்லை - காவல்துறை விளக்கம்

கள்ளச்சாராயத்திற்கு இருவர் பலியானதாக செய்தி வெளியான நிலையில் மதுபானத்தில் விஷம் கலந்து கொடுத்ததே மரணத்திற்கு காரணம் என திண்டுக்கல் மாவட்ட காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
நிலக்கோட்டை அருகே 2 பேர் கள்ளச் சாராயம் குடித்து சாகவில்லை - காவல்துறை விளக்கம்
x
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே கள்ளச்சாராயம் குடித்த 2 பேர் உயிரிழந்ததாக கடந்த 5 ஆம் தேதி செய்தி வெளியானது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட பின்னர், கள்ளச்சாராய சாவுகளே இல்லை என்று, சொல்லப்பட்ட நிலையில், மது குடித்த இருவர் உயிரிழந்ததாக வந்த செய்தி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த இருவர் மரணம் குறித்து, காவல்துறை விரிவான விளக்கம் அளித்துள்ளது. கொடைரோடு அரசு மதுபான கடை மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்த, ராஜலிங்கத்திடம் பள்ளப்பட்டியை சேர்ந்த ஜெயச்சந்திரன் மதுப்பாட்டில்களை வாங்கி சில்லறை விற்பனை செய்து அதில் வரும் லாபத்தை இருவரும் பகிர்ந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில், ஜெயச்சந்திரன் வேறு ஒரு மதுபானக்கடையில் இருந்து மது பாட்டில்களை வாங்கி, தனியாக விற்பனை செய்து முழு லாபத்தை அனுபவித்து வந்தது ராஜலிங்கத்திற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளதாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. ஜெயச்சந்திரனை பழி வாங்க திட்டமிட்ட, ராஜலிங்கம், ஜெயச்சந்திரனின் முன்னாள் எதிரி தமிழ்வாணன் என்பவரை, சேர்த்து கொண்டு சதித்திட்டம் தீட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து ஓல்டு செஃப், மது பாட்டில்களை வாங்கி, அதில் தமிழ்வாணனின் உறவினர் கிருஷ்ணமூர்த்தியிடமிருந்து வாங்கிய வெள்ளை பாசானத்தை, ராஜலிங்கம் கலந்துள்ளார். பின்னர், அதனை செந்தில் என்பவர் மூலம், ஜெயச்சந்திரன் கடைக்கு அனுப்பி முதலில், 5 ஓல்டு செஃப் பாட்டில்களை வாங்கி விட்டு பின்னர், அது வேண்டாம் என்று கூறி, தாங்கள் கொண்டு சென்ற விஷம் கலந்த பாட்டிலை கடையில் கொடுத்துள்ளனர். கடந்த 5 ஆம் தேதி அதிகாலை ஜெயச்சந்திரனின் சிக்கன் கடையில், மது வாங்கிய முருகன், சமயன் மற்றும் தங்கப்பாண்டி என்பவரிடம் விஷம் கலந்த மதுப்பாட்டிலை, செல்வம் வழங்கியுள்ளார். அதை குடித்த முருகனும், சமயனும் இறந்து விட்ட நிலையில் தங்க பாண்டி தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.  இதனை தொடர்ந்து, கொலை வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் ராஜலிங்கம், வெள்ளை பாசானம் வழங்கிய பாலு உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்தனர்.  

மேலும், சட்டவிரோதமாக சில்லறை மது பானம் விற்பனை செய்த ஜெயச்சந்திரன், செல்வம் ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த இருவரின் மரணத்திற்கு காரணம், தனிப்பட்ட விரோதங்களால் திட்டமிட்டு மதுபானத்தில் விஷம் கலக்கப்பட்டதே என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. கள்ளச்சாராயத்திற்கு இருவர் பலியாகி விட்டதாக செய்தி வெளியான நிலையில், தனி நபர்களுக்கிடையே இருந்த மோதல் காரணமாக, இருவர் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக காவல்துறை விளக்கம் அளித்திருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்