சென்னை சட்டக்கல்லூரி மோதல் வழக்கு : தண்டிக்கப்பட்ட 21 மாணவர்கள் விடுதலை - சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை சட்டக்கல்லூரி மோதல் வழக்கில், தண்டிக்கப்பட்ட 21 மாணவர்களையும் விடுதலை செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
* சென்னை பாரிமுனையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில், 2008 ஆம் ஆண்டு நடந்த மோதல் வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 21 மாணவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
* இந்த தீர்ப்பை எதிர்த்து மாணவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு , நீதிபதி சுரேஷ் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.
* காவல் துறையினர் அடையாள அணிவகுப்பு நடத்தாதது, நேரில் பார்த்த சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படாதது , குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒரு மாணவரை மட்டுமே தன்னால் அடையாளம் காட்ட முடியும் என கல்லூரி முதல்வர் வாக்குமூலம் அளித்துள்ளது ஆகியவற்றை சுட்டிக்காட்டிய நீதிபதி , குற்றம் சாட்டப்பட்ட 21 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
* பள்ளி, கல்லூரி நாட்களில் கல்வி மட்டும் பயிலாமல், நீதிநெறிகளையும் கற்றறிந்து கொள்ள வேண்டும் என்றும் , குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ வேண்டும் என்றும் மாணவர்களுக்கு நீதிபதி அறிவுரை கூறியுள்ளார்.
* அஹிம்சையை போதித்த காந்தி பிறந்த நாட்டில், பள்ளி, கல்லூரி நாட்களில் மாணவர்கள் சகோதரத்துவத்தையே பின்பற்ற வேண்டும் என்றும், வெறுப்புணர்வையும், வன்முறையையும் அறவே ஒதுக்க வேண்டும் எனவும் நீதிபதி சுரேஷ் குமார் வலியுறுத்தியுள்ளார்.
Next Story