பணம் பெற்றுக் கொண்டு பாலியல் தொழிலை அனுமதித்த விவகாரம்
லட்சக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு பாலியல் தொழிலை அனுமதித்த இரு காவல் துறை அதிகாரிகளுக்கு எதிரான விசாரணையை 2 மாதத்தில் முடித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்கும்படி லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை நகரில் பாலியல் தொழில் தடுப்புப் பிரிவில் ஆய்வாளர்களாக பணியாற்றிய சாம் வின்சென்ட், சரவணன் ஆகியோர் தரகர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு பாலியல் தொழிலை அனுமதித்ததாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின. இதுதொடர்பாக விசாரணை நடத்திய காவல் ஆணையர், இதில் சம்பந்தப்பட்ட இரு ஆய்வாளர்களையும் பிற காவல் நிலையங்களுக்கு மாற்றி உத்தரவிட்டார். இந்த நிலையில் இவர்கள் இருவரையும் பணியிடை நீக்கம் செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இவர்கள் 2 பேரும் காவல்துறையில் பணியில் நீடிக்கவே தகுதியற்றவர்கள் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இவர்கள் 2 பேர் மீதான விசாரணையை இரு மாதங்களுக்குள் முடித்து, தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Next Story