காதலனுடன் தகராறு : தனியே சென்ற பெண்ணை பலாத்காரம் செய்த ஆட்டோ ஓட்டுநர்
சுற்றுலா சென்ற இடத்தில் காதலனுடன் தகராறு ஏற்பட்டு தனியே சென்ற இளம்பெண்ணை ஊரில் விடுவதாக அழைத்து சென்று பலாத்காரம் செய்த ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஈரோட்டை சேர்ந்த வாசுதேவன் தனது காதலியுடன் ஏற்காடு பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு தங்கும் விடுதியில் தங்கிய போது வாசுதேவன் மது அருந்தியுள்ளார். இதன்பின் ஏற்பட்ட சிறு தகராறை அடுத்து இரவு நேரத்தில் வாசுதேவனை விட்டு காதலி தனியே சென்றுள்ளார். காதலியை சமாதானம் செய்ய வாசுதேவனும் பின் தொடர்ந்து வந்துள்ளார். இதை கண்ட ஜெரினாக்காட்டை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் விஜயகுமார் மற்றும் கார் ஓட்டுநர் குமார் இருவரும் வாசுதேவனை தாக்கியுள்ளனர். பின்னர் அவரிடமிருந்து பணத்தை பறித்து வாசுதேவனின் காதலியை சேலத்தில் இறக்கி விடுவதாக நம்பிக்கையாக பேசி அழைத்து சென்றுள்ளனர். போகும் வழியில் குமார் இறங்கிய நிலையில், விஜயக்குமார் இரவு நேரத்தை காரணம் காட்டி தனக்கு தெரிந்த தங்கும் விடுதிக்கு அப்பெண்ணை அழைத்து சென்றுள்ளார். அங்கு அந்த பெண்ணை பலாத்காரம் செய்த விஜயக்குமார், அதிகாலையில் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே அப்பெண்ணை இறக்கிவிட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வாசுதேவன் ஏற்காடு காவல்நிலையத்திலும், அவரது காதலி சேலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் புகார் அளித்தனர். இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
Next Story