கருவாடு முதல் கம்ப்யூட்டர் வரை அனைத்தும் கிடைக்கும் பல்லாவரம் சந்தை

சென்னை நகர பிரம்மாண்டங்களுக்கு மத்தியில் கிராமத்தை போன்ற தோற்றத்துடன் எல்லா பொருட்களும் கிடைக்கும் ஒரு இடம் பல்லாவரம் சந்தை
கருவாடு முதல் கம்ப்யூட்டர் வரை அனைத்தும் கிடைக்கும் பல்லாவரம் சந்தை
x
ஓங்கி உயர்ந்த கட்டடங்கள், அவசர கதியில் இயங்கும் மனிதர்கள் சூழ்ந்த நகரமாகவே சென்னை காட்சியளிக்கிறது. ஆனால் அதையும் தாண்டி ஒரு கிராமத்தின் திருவிழாவுக்குள் நுழைந்தது போன்ற உணர்வை தருகிறது பல்லாவரம் சந்தை.

சென்னை நகரில் பிரதான இடத்தில் இயங்கி வரும் இந்த சந்தை 200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்கிறார்கள். இங்கு கிடைக்காத பொருட்களே இல்லை எனும் அளவுக்கு அத்தனையும் கொட்டி கிடக்கும் ஒரு இடமாக இருக்கிறது இந்த சந்தை.

வீட்டில் அழகிய தோட்டம் அமைக்க வேண்டுமா? மண்வெட்டி தொடங்கி, விதைகள், உரம், செடிகள் வரை அத்தனையும் இங்கு வாங்கிச் செல்லலாம். உங்கள் வீட்டில் விருந்துக்கு உணவு சமைக்க வேண்டுமா? பாத்திரம் முதல் மளிகை சாமான்கள், எண்ணெய், புளி, காய்கறிகள், இறைச்சி என எல்லாவற்றையும் மொத்தமாகவும் உங்கள் வசதிக்கேற்பவும் வாங்கிச் செல்ல முடியும்.

கடைகளில் விற்பனை செய்யப்படுவதை விட இங்கு மளிகைப் பொருட்கள் பல நூறு ரூபாய்கள் குறைவாக கிடைப்பதாக மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். நம் வீட்டில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் தேவையில்லை என்றாலும் கூட அதனை இந்த சந்தையில் கொண்டு வந்தால் அதை தேவைப்படுவோர் வாங்கி செல்கிறார்கள்.

மாதாந்திர தவணையில் பொருட்களை வாங்க முடியாத நடுத்தர குடும்பத்தினர் தங்களுக்கு தேவையான பொருட்களை செகண்ட்ஸ் சேல்ஸில் வாங்கி செல்கின்றனர். கம்ப்யூட்டர், வாஷிங் மெஷின், டிவி, டிவிடி பிளேயர், நாற்காலிகள், கட்டில் என எல்லாம் இங்கே கிடைக்கிறது. இந்த சந்தைக்கு நீங்கள் பொருட்களை வாங்கிச் செல்ல வேண்டும் என்றால் நிச்சயம் ஒரு நாள் போதாது. காரணம் இங்கு கிடைக்கும் பொருட்களை எல்லாம் சுற்றிப் பார்க்கவே நேரம் போதாது உங்களுக்கு. 

குழந்தைகளுக்கு தேவையான டெடி பியர் பொம்மைகள், வாக்கர், சைக்கிள்கள் போன்ற பொருட்களையும் மலிவாக வாங்க ஏற்ற இடம் இது. சமையலுக்கு தேவையான மிளகு, பட்டை, கிராம்பு போன்ற மசாலா பொருட்கள், சிறுதானிய வகைகள், பருப்பு, கருப்பட்டி, வெல்லம் உள்ளிட்ட பொருட்களையும் இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கிறார்கள்.

பழமையின் பெருமையை மீட்டெடுக்கும் முயற்சியில் உள்ள இந்த சந்தையில் பழங்கால பொருட்களையும் நீங்கள் வாங்க முடியும். பழங்கால நாணயங்கள், செம்புகள், கிராமபோன் போன்ற பொருட்களும் இங்கு கிடைப்பதே இந்த சந்தைக்கு வருவோரின் மகிழ்ச்சிக்கு ஒரு காரணம். 

இந்த சந்தையின் மற்றொரு சிறப்பம்சம் இங்கு கிடைக்கும் செல்லப்பிராணிகள் தான். கலர் கலர் கோழிக் குஞ்சுகள், நாட்டுக் கோழிகள், காடை முட்டைகள், புறா, லவ் பேர்ட்ஸ், நாய் என எல்லாம் இங்கு குறைவான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. திருப்பூரில் இருந்து குறைவான விலைக்கு துணிகளை வாங்கி வந்து இங்கு விற்பனை ஜரூராக நடக்கிறது. இந்த சந்தைக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநில வியாபாரிகளும் வருகிறார்கள். 

வெள்ளிக் கிழமைகளில் நடக்கும் இந்த சந்தையில் 5 ரூபாய்க்கு கூட நீங்கள் பொருட்களை வாங்கிச் செல்லலாம். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக் கிழமைகளில் இந்த சந்தையில் ஒரு கோடி ரூபாய் வரை விற்பனை நடப்பதாக கூறப்படுகிறது. உங்கள் பணத்தை மிச்சப்படுத்துவதை தாண்டி ஒரு திருவிழாவுக்கு போய் வர வேண்டும் என விரும்பினால் நிச்சயம் பல்லாவரம் சந்தைக்கு ஒரு முறை போய் வாருங்கள்.


Next Story

மேலும் செய்திகள்