ரூ.10 நாணயங்கள் வாங்கப்படுகிறதா? மறுக்கப்படுகிறதா? - தந்தி டி.வி. நடத்திய கள ஆய்வு

10 ரூபாய் நாணயங்களின் புழக்கத்தில் உள்ள சிக்கல்கள் குறித்த கள நிலவரத்தை அறிவதற்காக தந்தி டிவி,தமிழகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் மக்களிடம் கருத்து கேட்டது.
ரூ.10 நாணயங்கள் வாங்கப்படுகிறதா? மறுக்கப்படுகிறதா? - தந்தி டி.வி. நடத்திய கள ஆய்வு
x
தமிழகத்தில் 10 ரூபாய் நாணயங்களின் புழக்கத்தில் பல்வேறு சிக்கல்கள் இருப்பது தெரியவந்தது.சிறுகடைகள் முதல் பேருந்துகள், மருத்துவமனைகள் என பல்வேறு இடங்களில் பத்து ரூபாய் நாணயங்கள் வாங்க மறுக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. புழக்கத்தில் உள்ள 10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என்றும், வாங்க மறுப்பது தண்டனைக்குரிய குற்றம் எனவும் ரிசர்வ் வங்கி பலமுறை ஊடகங்களில் அறிவிப்பினை வெளியிட்டது. ஆனாலும், 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்று, எப்போதோ பரவிய வதந்தி இன்னமும் முற்றுப்பெறாமல், நீடிக்கிறது. இந்நிலையில் 10 ரூபாய் நாணயங்களின் புழக்கத்தில் மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்ன என்பது குறித்து தமிழகம் முழுவதும் தந்தி டி.வி. கள ஆய்வு நடத்தியது. 

வணிகர்கள், வாடிக்கையாளர்கள் என பல தரப்பு மக்களிடமும் தந்தி டி.வி. கருத்து கேட்டது. ஒட்டு மொத்தமாக தமிழகம் முழுவதும் 262 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. 

10 ரூபாய் நாணயங்களை வணிகர்கள் வாங்குகிறார்களா என்ற கேள்விக்கு 26 சதவீதம் பேர் மட்டுமே ஆம் என்று தெரிவித்தனர். மீதம் 74 சதவீதம் இல்லை என்று பதிலளித்தனர். மக்களிடம் பெற்றுக்கொள்கிறோம். ஆனால், மக்கள் எங்களிடம் இருந்து பெற்றுக்கொள்வதில்லை என்பதும் வங்கிக் கணக்குகளில் செலுத்த முடிவதில்லை.வாங்கப்பட்ட நாணயங்கள் தேங்கிக் கிடக்கின்றன என்பதும், வணிகர்களின் குற்றச்சாட்டாக உள்ளது. அரசுப்பேருந்துகள்,வங்கிகள் போன்ற அரசு நிறுவனங்களிலே 10 ரூபாய் நாணயங்கள் வாங்க மறுக்கப்படுவதாகவும், கடைகளிலும் பெற்றுக்கொள்ளப்படாததால்  புழக்கத்தில் விடுவது மிகவும் சிரமமாக இருப்பதாகவும் மக்களின் கருத்தாக உள்ளது.

பேருந்துகளில் ஏன் வாங்க மறுக்கப்படுகிறது என்ற கேள்விக்கு மக்கள் வாங்குவதில்லை என்பதால், நாணயங்கள் தேங்கிவிடுவதாகவும், நடத்துநர்கள் பதிலளித்தனர். நாணயங்களை எண்ணவோ, சேமித்துவைக்கவோ போதிய கட்டமைப்பு வசதியில்லை என்பதும், 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்திற்கு மட்டுமே தவிர வங்கியில் செலுத்துவதற்கில்லை என்பதும் வங்கிகளின் எண்ணமாக உள்ளது. மேலும், ரிசர்வ் வங்கி 10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என்றுதான் கூறியுள்ளதே தவிர, வங்கிகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறவில்லை என வங்கி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

 மொத்தத்தில் 100 க்கு 26 சதவீத மக்கள் மட்டுமே 10 ரூபாய் நாணயங்கள் வாங்கப்படுவதாகவும், மீதமுள்ள 74 சதவீதம் பேர் இல்லை என்றும் தெரிவித்தனர். இதன் மூலம், 10 ரூபாய் நாணயங்களை பெரும்பாலான மக்கள் பயன்படுத்த முடியாமல் சிரமங்களை எதிர்கொண்டு வருவது ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்