சென்னை அணியில் வீரர்களே இல்லையா? - வாய்ப்புக்காக ஏங்கும் சிஎஸ்கே வீரர்கள்
என்னதான் ஆனது சென்னை அணிக்கு ... வேறு வீரர்களே இல்லையா என்ற கேள்வி சென்னை அணியின் ரசிகர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் எழுந்துள்ளது. அதற்கு விடைகாணும் முயற்சியாக இதுவரை வாய்ப்பே கிடைக்காத சென்னை வீரர்களை பற்றி பார்ப்போம்..
ஐ.பி.எல். 2020யின் முதல் போட்டியிலேயே, எதிரியாக பார்க்கப்படும் மும்பையுடன் வெற்றி பெற்றதால் குதூகலத்தில் ரசிகர்கள் இருந்த நிலையில், ராஜஸ்தான், டெல்லி, ஐதரபாத் என சென்னை அணிக்கு தொடர் தோல்விகள்.
ஒவ்வொரு முறை தோற்கும் போதும் அடுத்த போட்டியில் பார்க்கலாம் என சமாதானமாகி நகர்ந்து வந்த நிலையில், இப்போது அச்சம் எழுகிறது... ப்ளே ஆப் சுற்றில் சென்னை அணியை பார்க்க முடியுமா முடியாதா என்று...
என்னதான் ஆனது சென்னை அணிக்கு... சொதப்பும் வீரர்களுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்படுவது எதனால்... வீரர்களே இல்லையா...? அல்லது வாய்ப்பு கிடைக்கவில்லையா...? இது போன்ற கேள்விகளுக்கு விடை தேடிப் பார்ப்போம்...
தொடக்க ஆட்டக்காரர்களில் வாட்சன் தொடர்ந்து தடுமாறி வருகிறார்... ஐதராபாத் அணியுடனான தோல்விக்கு பின் பேசிய அவர், தோல்விக்கு தானும் பொறுப்பை என்பதை பகிரங்கமாகவே ஒப்புக் கொண்டார். சென்னை அணியில் அவருக்கு மாற்று இருக்கிறதா என்றால், கட்டாயம் இருக்கின்றனர்...
சென்னை அணியில் இதுவரை வாய்ப்பே கிடைக்காத வீரர்கள் என்று பார்க்கும் போது, தமிழக வீரர் ஜெகதீசன் முக்கியத்துவம் பெறுகிறார். கடந்த ஆண்டு தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் திண்டுக்கல் அணியை கேப்டனாக வழி நடத்தி இறுதி போட்டிக்கு அழைத்து வந்தவர். 10 போட்டிகளில் 448 ரன்கள் குவித்த இவர், கடந்த ஆண்டின் அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற பெருமையை பெற்றார். ஓபனிங் பேட்ஸ்மேனான இவரை, வாட்சனுக்கு மாற்றாக களமிறக்க முடியும். வாட்சனுக்கு ஓய்வு கொடுக்கும் பட்சத்தில் வெளிநாட்டு ஆட்டக்காரராக இம்ரான் தாஹீரை களமிறக்க முடியும்.
மகாராஷ்டிராவை சேர்ந்த இளம் வீரர் கெய்க்வாட்க்கு 2 வாய்ப்புகள் அளித்ததை போல, தமிழக வீரர் ஜெகதீசனுக்கும் வாய்ப்பு அளித்து பார்க்கலாம்.
அப்படி இல்லாத பட்சத்தில், ரோகித், டுவைன் ஸ்மித், என பலரையும் ஓபனிங் பேட்ஸ்மேனாக மாற்றியுள்ள தோனி, சாம் கரனை ஓபனிங் அனுப்பி பார்க்கலாம்...
இதே போல தமிழகத்தை சேர்ந்த இடது கை சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர் வாய்ப்புக்காக ஏங்கி கொண்டிருக்கிறார். கேதர் ஜாதவுக்கு இவர் சிறந்த மாற்றாக இருப்பார்.
இவ்வாறு வாய்ப்பு அளித்தால், டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணிக்கு தமிழகத்தில் இருந்து சிறந்த வீரர்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
பஞ்சாப் அணியில் முருகன் அஸ்வினும், ஐதராபாத் அணியில் நடராஜனும் என தமிழகத்தை சேர்ந்த வீரர்கள் கலக்கி கொண்டிப்பதே இதற்கு உதாரணம்
Next Story