தி.மு.க. தலைவர் கருணாநிதியின் தேசிய அரசியல் பயணங்கள்

தி.மு.க. தலைவர் கருணாநிதியின், தேசிய அரசியல் பயணங்களை இந்த தொகுப்பு விவரிக்கிறது...
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் தேசிய அரசியல் பயணங்கள்
x
உறுப்பினர் அல்லாத ஒருவரின் மரணத்திற்காக, நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதில்லை. முன்னாள் உறுப்பினர் மரணத்தின் போதும், மக்களவை, மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டது இல்லை. மறைந்தவர், உறுப்பினராக இருந்த அவை மட்டுமே, ஒத்தி வைக்கப்படுவது வழக்கம்.
இந்திய வரலாற்றில், முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத ஒருவரின் மரணத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு, இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அவர் தான், தி.மு.க. தலைவர் கருணாநிதி.

ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு வந்த 13 பிரதமர்களையும் பார்த்துள்ள கருணாநிதி, திருவாரூர் சட்டமன்ற உறுப்பினராகவே, மறைந்துள்ளார்.சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தல் 1952ம் ஆண்டில், நடைபெற்ற போது, தி.மு.க. பங்கேற்கவில்லை. 1967ம் ஆண்டு  தி.மு.க. ஆட்சியமைத்தபோது, 10 ஆண்டுகால சட்டமன்ற அனுபவம் உள்ளவராக இருந்தார் கருணாநிதி. 1969ம் ஆண்டு, அவர் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற போது, இந்திரா காந்தி பிரதமராக இருந்தார். முதல்வராக பதவி ஏற்றதும் டெல்லி சென்றவர், இந்தியா முழுவதும் அறிந்தவராக திரும்பி வந்தார். 

காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு எதிராக, 1969ம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலில், வி.வி.கிரியை இந்திரா காந்தி, களமிறக்கினார். அப்போது, கருணாநிதி ஆதரவளித்தார். வி.வி.கிரி, குடியரசுத் தலைவர் ஆனார். ஸ்தாபன காங்கிரஸ், இந்திரா காங்கிரஸ் என கட்சி பிளவு பட்டபோது, 25 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த கருணாநிதி, இந்திரா காந்தியின் பக்கம் நின்றார். இந்திரா காந்தி, மிசா சட்டம் கொண்டு வந்த நிலையில்,  டெல்லிக்கு சென்ற கருணாநிதி, வாஜ்பாய் உள்ளிட்ட எதிர்க்கட்சி பிரமுகர்களை அழைத்து, ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இது, அடுத்த மக்களவை தேர்தலில், ஆட்சிக்கு வந்த ஜனதா கட்சி அமைய வித்திட்டதாகக் கருதப்படுகிறது. மிசாவுக்குப் பிறகு, காங்கிரஸ் உடன், நாடு முழுவதிலும் இருந்த அரசியல் கட்சிகள் விலகியே நின்றன. 1980-ம் ஆண்டு, மக்களவை தேர்தலில், முதல் கட்சியாக தி.மு.க., தலைவர் கருணாநிதி, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தார்.


காங்கிரஸ் கட்சி, மீண்டும் ஆட்சி அமைத்தது. அதன் நாடாளுமன்ற கட்சித் தலைவர் கூட்டத்தில் எம்.பி. அல்லாதவரான கருணாநிதி அழைக்கப்பட்டார். ராஜிவ் காந்தியிடம் இருந்து விலகி, தேசிய முன்னணி அரசை வி.பி.சிங் அமைத்தபோது, ஆட்சியமைப்பதில் கருணாநிதி முக்கியப் பங்காற்றினார். 1989 முதல் 1990ம் ஆண்டு வரை பிரதமராக இருந்தார் வி.பி.சிங். ஜனதா தளம் தலைமையிலான தேசிய முன்னணி கூட்டணியில் தி.மு.க.வும் இடம் பெற்று இருந்தது. ஆனால், அதற்கு தமிழகத்தில் ஒரு எம்.பி கூட கிடைக்கவில்லை. எனினும், வி.பி.சிங், தி.மு.க.வை தமது அமைச்சரவையில் இணைத்துக் கொண்டார். இது, முதன்முறையாக மத்திய அரசில் நிகழ்ந்த மாற்றமாகும். 


தேவ கௌடா மற்றும் ஐ.கே.குஜ்ரால் ஆகியோரை பிரதமராகத் தேர்வு செய்வததிலும், கருணாநிதி முக்கியப் பங்காற்றினார். 1999ம் ஆண்டு, பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்தார். அப்போது, ஒரு மாநில கட்சியிடம், தேசியக் கட்சி உத்தரவாதம் அளிக்கும் சூழலை உருவாக்கினார். பா.ஜ.க. உடன் கூட்டணி அமைத்த தி.மு.க. அரசியல் நுட்பம் என, விமர்சகர்கள் கருத்து ,1996 முதல் 2014ம் ஆண்டு வரை, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அ.தி.மு.க. அங்கம் வகித்த 13 மாதங்கள் நீங்கலாக, மத்திய அரசில் அங்கம் வகிக்க, கருணாநிதியின் அரசியல் நுட்பம் காரணமாக இருந்தது என்று, அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

கருணாநிதிக்கு புகழாரம் சூட்டிய மன்மோகன்சிங் பிரதமர் மோடியை பாராட்டிய கருணாநிதி பா.ஜ.க.விடம் இருந்து விலகியதும், காங்கிரஸ் கட்சியுடன் நெருங்கி, காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைவதில், கருணாநிதி முக்கிய பங்காற்றினார். "கருணாநிதியின் அனுபவமும் அறிவும் நாட்டை நிர்வகிப்பதில் உதவுவது, எங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டவசமானது," என்று, அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் பெருமிதம் தெரிவித்தார். 2014ம் ஆண்டு பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றபோது, ''உள்ளார்ந்த நுண்ணறிவு, கடுமையான உழைப்பு ஆகியவற்றின் மூலம், இந்தியாவின் உயர் பொறுப்பை அடைந்துள்ளீர்கள்'' என்று வாழ்த்தினார் கருணாநிதி. 

முதல் முறையாக, மத்திய அரசின் மீது ஒரு ஆணையம் அமைத்த வரலாறு, கருணாநிதியை சேரும். 1968-ம் ஆண்டு, தமிழக முதலமைச்சரான கருணாநிதி 'மாநில சுயாட்சி; மத்தியில் கூட்டாட்சி' என ஒரு புதிய கொள்கையை அறிவித்தார். இதற்கு வலுசேர்க்கும் வகையில், நீதிபதி பி.வி.ராஜமன்னார் தலைமையில் ஒரு ஆணையம் அமைத்தார். மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில் அமைக்கவும், மாநில அரசைக் கலைக்க அதிகாரம் வழங்கும் இந்திய அரசியல் அமைப்பின் பிரிவு 356ஐ ஒழிக்கவும் அந்த கமிட்டி பரிந்துரை செய்தது. முக்கிய முடிவுகள் இருதரப்பின் ஆலோசனைக்கு பிறகே அமைய வேண்டும் எனக் கூறப்பட்ட நடைமுறை இன்றும் அமலில் உள்ளது. அப்போது, கருணாநிதி தேசிய அளவில் பாராட்டப்பட்டார்.

பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தியவராக இருந்தாலும், தமது திறமை குறித்து எப்போதுமே அவர் குறைவாக நினைத்ததில்லை. இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் சரளமாக இல்லாதபோதும், தேசியத் தலைவர்களுடன் நெருக்கமாக இருந்தார். அவர்கள் அரசியலில் தாக்குப் பிடிக்க, தாம் மிகவும் முக்கியம் என்பதை அவர்களுக்கு உணர்த்தினார். தமக்கு பிரதமர் ஆவதற்கான சூழல் வந்தபோதும், அப்பதவிக்கு அவர் பிறரையே தேர்வு செய்தார். பிரதமர் பதவி குறித்த கேள்வி எழுப்பப்பட்டபோதெல்லாம், 'என் உயரம் எனக்குத் தெரியும்,' என்று கருணாநிதி வெளிப்படையாகவே கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்