மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் - நாடாளுமன்ற மக்களவையில் இன்று விவாதம்

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது இன்று விவாதம்...மக்களவையில் கட்சிகள் வாரியாக பேசுவதற்கு நேரம் ஒதுக்கீடு..
மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் - நாடாளுமன்ற மக்களவையில் இன்று விவாதம்
x
மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது மக்களவையில் இன்று விவாதம் நடைபெறுகிறது. மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பாக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளிலேயே கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானத்தை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்தார். அதன்படி, நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் இன்று விவாதம் நடைபெறுகிறது. விவாதத்துக்கு பிறகு, தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விவாதத்தில் பங்கேற்று பேச கட்சிகள் வாரியாக நேரம் ஒதுக்கீடு 

இந்நிலையில்,  மக்களவையில் விவாதத்தில் பங்கேற்று பேசுவதற்கு கட்சிகள் வாரியாக நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆளும் கட்சியான பா.ஜ.க.வுக்கு 3 மணி  33 நிமிடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 38 நிமிடங்களும் ஒதுக்கப்பட்டு உள்ளது. மூன்றாவது பெரிய கட்சியான அ.தி.மு.க.வுக்கு 29 நிமிடங்களும், திரிணாமுல் காங்கிரசுக்கு 27 நிமிடங்களும், பிஜூ ஜனதா தளத்துக்கு 15 நிமிடங்களும், சிவசேனாவுக்கு 14 நிமிடங்களும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல தெலுங்கு தேசம் கட்சிக்கு 13 நிமிடங்களும், தெலங்கானா ராஷ்டிரிய சமீதி கட்சிக்கு 9 நிமிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுக்கு 7 நிமிடங்கள், சமாஜ்வாதி மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தலா 6 நிமிடங்கள்,  லோக் ஜன் சக்தி கட்சிக்கு 5 நிமிடங்கள். என மொத்தம் 6 மணி 35 நிமிடங்கள் வரை தீர்மானம் மீது விவாதம் நடத்த நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

"என் கண்களை பார்த்து பேச பிரதமர் மறுக்கிறார்" - பிரதமர் மோடி மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புகார்

மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்று பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரான்சுக்கு பிரதமர் சென்ற உடன், ரஃபேல் விமானத்தின் விலையும் உயர்ந்துவிட்டதாக விமர்சித்தார். பிரான்சுடன் ரகசிய ஒப்பந்தம் என பாதுகாப்புத்துறை அமைச்சர் கூறியதாகவும், ஆனால், அப்படி எதுவும் இல்லை என பிரான்ஸ் பிரதமர் தன்னிடம் கூறியதாக ராகுல் காந்தி தெரிவித்தார். உண்மைக்கு மாறான தகவலை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டதாக ராகுல்காந்தி தெரிவித்த போது, பா.ஜ.க. உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.  
தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, பிரதமர் தன் கண்களைப் பார்த்து பேச மறுக்கிறார் என்று ராகுல்காந்தி புகார் கூறிய போது, பிரதமர் புன்னகைத்தார். அப்போது தனது பேச்சை தொடர்ந்த  ராகுல்காந்தி, புன்னகையில் பதற்றம் தெரிவதாவும் கூறியதால் அவையில் பரபரப்பு நிலவியது.
ராகுல் காந்தி, சீன பிரதமருடன் பிரதமர் மோடி ஊஞ்சலாடிய போது, இந்தியா மீது சீனா தாக்குதல் நடத்தியது என்றும் குற்றம் சாட்டினார். தன் வாழ்க்கையில் ஒரு விமானம் கூட தயாரிக்காத ஒரு தொழில் அதிபரின் நிறுவனத்துக்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒப்பந்தம் அளிக்கப்பட்டு உள்ளதாகவும் ராகுல்காந்​தி குற்றம்சாட்டினார்.  பிரதமர் இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் ராகுல்காந்தி வலியுறுத்தினார்.
மக்களவையில் தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, பாஜகவினர் உள்ளத்திற்குள் தம் மீது வெறுப்பை சுமந்திருப்பதாக குற்றஞ்சாட்டினார். பின்னர், தாம் எப்போது பாஜகவினர் மீது உள்ளத்தில் அன்பை சுமப்பதாகவும் கூறி, பிரதமர் மோடியை கட்டித் தழுவினார். அப்போது இருவரும் பரஸ்பரம் கைகுலுக்கி கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்