இந்திய விமானப்படையில் இணைகிறது ரபேல் - எல்லையில் பதற்றமான சூழலில் முக்கிய நிகழ்வு

ரபேல் போர் விமானங்கள் இன்று முறைப்படி இந்திய விமானப்படையில் இணைக்கப்பட உள்ளன.
இந்திய விமானப்படையில் இணைகிறது ரபேல் - எல்லையில் பதற்றமான சூழலில் முக்கிய நிகழ்வு
x
ரபேல் போர் விமானங்கள் இன்று முறைப்படி இந்திய விமானப்படையில் இணைக்கப்பட உள்ளன. இந்திய விமானப்படைக்கு பிரான்ஸிடம் இருந்து 36 ரபேல் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில்,அவற்றில், 5 விமானங்கள் கடந்த ஜூலை 29-ந்தேதி இந்தியா வந்து சேர்ந்தன. இந்த விமானங்கள், அம்பாலா விமானப்படை தளத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் முறைப்படி இந்திய விமான படையில் இணைக்கப்படுகின்றன. இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரான்ஸ் ராணுவ அமைச்சர் பிளாரன்ஸ் பார்லி , முப்படை தளபதிகள், மூத்த அதிகாரிகள் பங்கேற்கின்றனர். நிகழ்ச்சிக்குப்பின் பிரான்ஸ் அமைச்சருடன், ராஜ்நாத் சிங் அம்பாலாவில் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். எல்லையில் சீனாவுடன் பதற்றமான சூழல் நிலவும் நிலையில், இந்த நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்த‌தாக கருதப்படுகிறது. 

மீன்வளம், கால்நடை - சிறப்பு திட்டம்

மீன்வளத்துறைக்காக, மத்ஸ்ய சம்பட யோஜ்னா திட்டத்தை இன்றைய தினம் பிரதமர் மோடி டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் தொடங்கி வைக்கிறார். 2020 முதல் 5 ஆண்டு காலத்திற்கு 20 ஆயிரத்து 50 கோடி ரூபாய் முதலீட்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதேபோல கால்நடை பராமரிப்பை ஊக்குவிக்கும் வகையில், இ-கோபாலா என்ற செயலியையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். 

செப்.12 முதல் கூடுதலாக 80 சிறப்பு ரயில்கள்

செப்டம்பர் 12-ம் தேதி முதல் நாடு முழுவதும் கூடுதலாக 80 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே வாரியம்  அறிவித்துள்ளது. இதில் தமிழகத்துக்கு 3 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னையிலிருந்து டெல்லிக்கு தினசரி ஒரு ரயில் இயக்கப்படும் என்றும் இந்த கூடுதல் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ மறுதேர்வு நடக்குமா? - உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை

சிபிஎஸ்இ மறுத்தேர்வு நடத்தும் விவகாரம் தொடர்பாக  உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது. சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு செப்டம்பர் மாதம் மறுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த‌து. இதனை ரத்து செய்ய கோரி மாணவர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம்,  7 ஆம் தேதிக்குள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமாறு சிபிஎஸ்இக்கு உத்தரவிட்டு,  இன்றைய தினத்திற்கு நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்த‌னர். 

இஎம்ஐ - வட்டிக்கு வட்டி வசூலிக்க தடை கோரிய வழக்கு - உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை

வங்கி கடன் இஎம்ஐ செலுத்தப்படும் காலத்தில் வட்டிக்கு வட்டி வசூலிக்க தடை கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. கடந்த மூன்றாம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஆஜரான மத்திய அரசின் வழக்கறிஞர் இஎம்ஐ வட்டிக்கு வட்டி வசூலிக்கும் முடிவை ரத்து செய்ய முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார். ஆகஸ்ட் 31 வரை கடன் தொகை செலுத்தாதவர்களின் கணக்கை வாராக்கடன் பட்டியலில் சேர்க்கக் கூடாது என உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் வழக்கை இன்றைய தினத்திற்கு ஒத்திவைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்