நிதி நிறுவனம் நடத்தி ரூ. 2,000 கோடி மோசடி
கேரளாவில் வாடிக்கையாளர்களிடம் 2000 கோடி அளவுக்கு மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த பாப்புலர் பைனான்ஸ் நிறுவன உரிமையாளர்கள் தாமஸ் டேனியல் ராய் மற்றும் அவரது மனைவி பிரபா ஆகியோர் பத்தனம்திட்டா எஸ்.பி. அலுவலகத்தில் சரணடைந்தனர்.
பத்தனம்திட்டா மாவட்டம் வாகாயரை தலைமையிடமாக கொண்டு 247 கிளைகளுடன் செயல்பட்டு வந்த பாப்புலர் பைனான்ஸ் நிறுவன உரிமையாளர்கள் தாமஸ் டேனியல் ராய் மற்றும் பிரபா. கடந்த ஏப்ரல் மாதம் முதல் நிதி நிறுவனத்தில் நூற்றுக்கணக்கான வைப்புத்தொகை வாடிக்கையாளர்களுக்கு வட்டி தொகை கொடுக்கவில்லை. அதன் பின்னர் பாப்புலர் ஃபைனான்ஸின் அனைத்து கிளைகளும் மூடப்பட்டது. இருவரும் கடந்த ஒரு மாதமாக குடும்பத்துடன் தலைமறைவானார்கள். இதனை அடுத்து நூற்றுக்கணக்கான வாடிக்கையாளர்கள் கோணி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், மாவட்ட எஸ்.பி. கே.ஜி.சைமன் தலைமையில் ஒரு விசாரணை குழு அமைக்கப்பட்டது. இதில் மாநிலம் முழுவதும் சுமார் 2000 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளது தெரிய வந்தது. தாமஸ் டேனியல் மகளான ரினு மற்றும் ரியா தாமஸ் இருவரும் டெல்லியில் இருந்து ஆஸ்திரேலியா தப்பி செல்ல முயன்ற நிலையில் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் இருவரும் பத்தனம் திட்டா மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில் தலைமறைவாக இருந்த தாமஸ் டேனியல் ராய் மற்றும் பிரபா இருவரும் சரணடைந்து உள்ளதாக கூறப்படுகிறது. மகள்கள் இருவரும் மகளிர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தாமஸ் டேனியல் அவரது மனைவி பிரபா ஆகியோர் பத்தனம்திட்டா காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
Next Story