கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை தடுக்க நடவடிக்கை - மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தகவல்
கடலில் வீணாக கலக்கும் 1200 டிஎம்சி தண்ணீரை தடுக்க 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் உபரி நீர் கொண்டு செல்லும் திட்டம் நடைமுறை படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநில தேசிய தொழில் நுட்ப கழகத்தின் 6-வது பட்டமளிப்பு விழா காரைக்கால் அருகே திருவேட்டக்குடியில் நடைபெற்றது. புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்ற இவ்விழாவில் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
116 இளங்கலை மற்றும் முதுகலை மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கி பேசிய அவர், தேசிய தொழில்நுட்ப கழக மாணவர்கள் உருவாக்கிய, சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும் உலர் தள கருவாட்டு இயந்திரத்தை மீனவர்களுக்கு வழங்கினார். கடலில் வீணாகும் 1200 டிஎம்சி தண்ணீரை தடுக்க நடவடடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். கோதாவரியில் இருந்து கடைமடைக்கு 60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் கிருஷ்ணா - பெண்ணாறு வழியாக ஆயிரத்து 252 கிலோ மீட்டர் தூரத்திற்கு உபரி நீர் கொண்டு செல்லும் திட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகவும் மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்தார்.
Next Story