ஆட்சி அமைக்க வருமாறு தேசியவாத காங்கிரசுக்கு ஆளுநர் அழைப்பு
மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கும் விவகாரத்தில், சிவசேனாவுக்கு 2 நாள் அவகாசம் தர மறுத்த ஆளுநர், தேசியவாத காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்குமாறு அழைப்பு விடுத்துள்ளதால் அங்கு அரசியல் குழப்ப நிலை நீடிக்கிறது.
288 இடங்களை கொண்ட மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில், பா.ஜ.க. 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி 54 இடங்களிலும், காங்கிரஸ் 44 இடங்களிலும் வெற்றி பெற்றன. இந்நிலையில் ஆட்சி அமைக்க பா.ஜ.க. மறுத்துவிட்ட நிலையில், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரே ஆளுநரை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியதாக தெரிவித்தார். 2 நாள் அவகாசம் கோரியதாகவும், ஆனால் கால அவகாசம் தர ஆளுநர் மறுத்துவிட்டதாகவும் அவர் கூறினார். எனினும் ஆட்சி அமைக்க முயற்சி நடைபெற்று வருவதாகவும் ஆதித்ய தாக்கரே தெரிவித்தார். இதனிடையே, தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் உள்ளிட்ட தலைவர்கள், ஆளுநர் அழைப்பின் பேரில் அவரை சந்தித்தனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவர் நவாப் மாலிக், தேசியவாத காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுத்ததாக தெரிவித்தார். எனினும் காங்கிரஸ் கட்சியுடன் ஆலோசித்த பின்னரே இது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
Next Story