ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய தடை நீடிப்பு

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய உச்சநீதிமன்றம் பிறப்பித்த தடை நீடிக்கிறது.
x
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அமலாக்கத்துறையினர் கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இது தொடர்பான வழக்கு  இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது அமலாக்கத்துறை  தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா பல்வேறு வாதங்களை முன்வைத்தார்.சட்ட விரோத பண பரிவர்த்தனை  கிரிமினல் குற்றம் என்றும், சில ஆதாரங்கள் அடிப்படையில், இந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் தொடர்பு இருப்பதை அறிந்த பின்னரே அவரை கைது செய்யும் முடிவுக்கு அமலாக்கத்துறை வந்ததாக அவர் வாதிட்டார். 

அமலாக்கத்துறை ப. சிதம்பரத்தை கைது செய்வதற்கான சட்டபூர்வமான உரிமையை உச்சநீதிமன்றம் மறுக்க முடியாது என்றும் , அவரை கைது செய்யும் அதிகாரம் அமலாக்கத் துறை இயக்குநருக்கு உள்ளதாகவும்  துஷார் மேத்தா தெரிவித்தார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில்  வெளிநாடுகளில் உள்ள சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளதாகவும் , இது தொடர்பான ஆவணங்களை திரட்டி, விசாரணை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டி உள்ளதாகவும்  அவர் நீதிமன்றத்தில் கூறினார்.

ப. சிதம்பரத்தை கைது செய்தது இழிவுபடுத்தவே என்று அவரது தரப்பு வழக்கறிஞர்  அபிஷேக் மனு சிங்வி கூறியதை மறுத்த துஷார் மேத்தா, ப.சிதம்பரத்தை சிபிஐ  கைது செய்தது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும் என்று தெரிவித்தார்.

விசாரணையின் போது உரிய ஆவணங்கள் குற்றம் சாட்டப்பட்டவரிடம் காட்டப்படும் என்று கூறிய துஷார் மேத்தா, போலி நிறுவனங்களை உருவாக்கியவர்கள் குற்றம்சாட்டப்பட்டுள்ளவருடன்  தொடர்பில் உள்ளதாகவும் கூறினார். 

அமலாக்கத்துறை தரப்பு வாதங்கள் தொடர்ந்ததால் வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அதுவரை ப.சிதம்பரத்தை  அமலாக்கத்துறை கைது செய்ய தடை நீடிக்கிறது. 



Next Story

மேலும் செய்திகள்