காதலியுடன் சேர்த்து வைக்க கோரி செல்போன் டவரில் ஏறி இளைஞர் மிரட்டல்
காதலியுடன் திருமணம் செய்து வைக்கக்கோரி 120 அடி உயர செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்திய இளைஞரை, நள்ளிரவு வரை பேச்சுவார்த்தை நடத்தி போலீசார் மீட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் கொங்கா ரெட்டி பள்ளியை வினோத் என்ற இளைஞர், அதே பகுதியில் முடிதிருத்தும் கடை நடத்தி வருகிறார். இவரும், முன்னேறிய வகுப்பை சேர்ந்த ஹேமா என்பவரும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், காதல் விவகாரம் ஹேமாவின் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது. காதலுக்கு ஹேமாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், வினோத் வீட்டுக்கு ஹேமா வந்துள்ளார். மகளை காணாமல் வினோத் வீட்டிற்கு வந்த ஹேமாவின் பெற்றோர், வினோத்தை தாக்கி கடுமையாக எச்சரித்துவிட்டு, மகளை தங்களுடன் அழைத்து சென்றுள்ளனர். இதனால் மனமுடைந்த வினோத், அதே பகுதியில் உள்ள 120 அடி உயரமுள்ள செல்போன் டவர் மீது உச்சிக்கு ஏறி தற்கொலை செய்து கொள்வதாக நேற்று மிரட்டல் விடுத்தார். தகவலறிந்த தீயணைப்புத் துறையினருடன் வந்த போலீசார் வினோத்துடன் பேச்சு நடத்தினர். நள்ளிரவு வரை பேச்சு நடத்திய நிலையில் வினோத் தனது நிலைப்பாட்டில் இருந்து இறங்கிவரவில்லை. இந்நிலையில், அதிகாலை அவரை பத்திரமாக மீட்ட சித்தூர் போலீசார், மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
Next Story