மகளிர் இட ஒதுக்கீடும்...அரசியல் கட்சிகளும்...

நாட்டில் பெண்களுக்கு சட்டம் இயற்றுவதில், 33 சதவிகித இட ஒதுக்கீட்டை அளிக்க தயார் என, பல்வேறு அரசியல் கட்சிகளும் வரிந்து கட்டிக்கொண்டு பேசி வருகின்றன.
மகளிர் இட ஒதுக்கீடும்...அரசியல் கட்சிகளும்...
x
19 வது மக்களவை தொகுதி தேர்தல் களம், சூடு பிடிக்க துவங்கியுள்ளது. இந்நிலையில்,  அரசியல் கட்சிகள், தேர்தல் அறிக்கைகளை இறுதி செய்வதில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் கட்சிகள், நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டை தாங்கள் ஆட்சிக்கு வந்தால், நிறைவேற்ற உறுதுணையாக இருப்போம் என்று அறிவித்துள்ளன. 

இதில் ஒரு படி மேலே போய் பிஜு ஜனதாதளம் வரும் மக்களவை தேர்தலில் 33 சதவிகித தொகுதிகளையும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 41 சதவிகித இடங்களையும் பெண்களுக்கு ஒதுக்கி அறிவித்துள்ளன. நாட்டில், நடைபெற்ற முதல் மக்களவை தேர்தலில், அகில இந்திய அளவில் தேர்வு செய்யப்பட்ட 24 பெண்களில், தமிழகத்தை சேர்ந்த இருவர் எம்.பிக்களாக தேர்வாகினர். 

அதனை தொடர்ந்து படிப்படியாக, ஏற்ற இறக்கங்களுடன், மக்களவைக்கு, நடைபெற்ற தேர்தல்களில் பெண்கள், எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருந்தது. கடந்த 2014 ஆம் ஆண்டு, நடைபெற்ற 16 வது மக்களவை தேர்தலில் அதிகபட்சமாக, 66 பெண்கள், எம்.பி.க்களாக தேர்வானார்கள். இவர்களில் 4 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். 16 வது மக்களவையில் 11 சதவிகித பெண்கள், உறுப்பினர்களாக இருந்தனர். அவர்களில் 7 பேர் அமைச்சர்களாக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது. 

கடந்த 2014 ஆம் ஆண்டு 543 தொகுதிகளுக்கு 8 ஆயிரத்து 136 பேர், போட்டியிட்டதில் 636 பேர் பெண்கள். இதே போல் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் போட்டியிட்ட 8 ஆயிரத்து 76 பேரில், 556 பேர் பெண்கள் ஆவர். இது வரை நடைபெற்ற 16 மக்களவை தேர்தல்களில் தேர்வான, எம்.பி.க்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 488 ஆவர். இவர்களில் பெண் எம்.பிக்களின் எண்ணிக்கை 633 ஆகும். 

16 மக்களவை தேர்தலிலும் சராசரியாக, 7 புள்ளி நான்கு ஐந்து சதவிகித பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சி சார்பில் 306 பெண்களும், ஜனசங்கம் மற்றும் பாஜக சார்பில் 115 பேரும், ஜனதா கட்சி, மற்றும் ஜனதா தளம் சார்பில் 25 பேரும், இடது சாரி கட்சிகள் 38 பேரையும் மக்களவைக்கு அனுப்பியுள்ளன. திரிணாமூல் காங்கிரஸ் 22 பேரையும், சமாஜ்வாதி கட்சி 19 பேரையும் அதிமுக 7 பேரையும், திமுக 5 பேரையும், பிற கட்சிகள் 85 பெண்களையும் 11 பெண்கள் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று மக்களவைக்கு சென்றனர். 

கடந்த மக்களவையில் தான், அதிக பெண் எம்.பிக்கள் தேர்வானார்கள். மிக குறைந்த பெண் எம்.பி.க்கள் தேர்வு செய்யப்பட்டது, அவசர நிலை காலத்திற்கு பின்னால் நடைபெற்ற 1977 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் கடந்த 1980 ஆம் ஆண்டு, முதன்முதலாக மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண்களின் எண்ணிக்கை 100 ஐ தாண்டியது. அரசியல் கட்சிகளில் பெண் எம்.பி.க்களை மிக குறைந்த அளவில் மக்களவைக்கு அனுப்பியது மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ்வாதி கட்சி தான்.

உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவிகிதம் என்பது மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் எண்ணத்தில் உருவானது. ஆனால் இது 1993 ல் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த இட ஒதுக்கீட்டை சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் அளிக்க அரசியல் காரணங்கள் இடம் தராமல் உள்ளன. பல முறை, இந்த மசோதா மக்களவையில் நிறைவேறினாலும், மாநிலங்களவையில் நிறைவேறவில்லை. இதே போல் மாநிலங்களவையில் நிறைவேறினால், மக்களவையில் நிறைவேறவில்லை.

பெண் பிரதமர், குடியரசுத்தலைவர், சபாநாயகர், முதலமைச்சர்கள், தற்போது பாதுகாப்புத்துறை அமைச்சர் என பெண்களின் பங்களிப்பு இருந்தாலும், 33 சதவிகித இட ஒதுக்கீடு மட்டும், நாடாளுமன்றத்தில் தொடர்ந்து தோற்கடிக்கப்பட்டு வருகிறது. நாடாளுமன்றத்தில் பெண்களின் பங்களிப்பை உலக அளவில், உற்றுநோக்கும் போது, 193 நாடுகளின் பட்டியலில் இந்தியா 150 வது இடத்தில் 12 புள்ளி ஆறு சதவிகிதம் பங்களிப்புடன் உள்ளது. இஸ்லாமிய நாடான வங்கதேசத்தில் 20 புள்ளி ஆறு சதவிகித பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். அண்டை நாடான பாகிஸ்தானில் 20 புள்ளி 2 சதவிகிதமாக உள்ளது. மிகவும் பின்தங்கிய நாடுகளாக கருதப்படும், ருவாண்டா, கியூபா, பொலிவியா போன்ற நாடுகளின் நாடாளுமன்றங்களில் 61 புள்ளி 3, 53 புள்ளி 2, 53 புள்ளி 1 பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். 

வளர்ந்த நாடுகளில் ஃபின்லாந்தில் 41 புள்ளி ஒரு சதவிகித பெண்களும், நியுசிலாந்து மற்றும் ஃபிரான்சில் முறையே 40, 39 புள்ளி 7 சதவிகித பெண்கள் எம்பிகளாக உள்ளனர். 
ராணி மங்கம்மாள், வேலு நாச்சியார், முத்து லட்சுமி ரெட்டி மற்றும் ஜெயலலிதா உள்பட அரசியலில் கோலோச்சிய பெண்களின் எண்ணிக்கை நீள்கிறது. ஆனால், தற்போது அரசியல் கட்சிகள், பெண்களுக்கு போதுமான வாய்ப்பை வழங்குவதில்லை. அரசியல் குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு மட்டும் தான் வாய்ப்பு வழங்கப்படுகிறது. 

கடந்த 1952 ஆம் ஆண்டு முதல் 5 முறை எம்.பியாக தேர்வான, மரகதம் சந்திரசேகர் தான், அமைச்சரான முதல் தமிழக பெண் ஆவார். 1967, 1980 மற்றும் 1996 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொது தேர்தல் மூலம் ஒரு பெண் கூட மக்களவைக்கு தேர்வாகவில்லை. 2004 மற்றும் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பொது தேர்தலில் தலா 4 பேர், மக்களவைக்கு தேர்வானார்கள். 


Next Story

மேலும் செய்திகள்