சருகுமான் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? : வேட்டையாடுதலால் அழிந்துவரும் அரிய உயிரினம்

சருகுமான் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? வேட்டையாடுதலால் அழிவின் விளிம்பில் இருக்கும் இவை பற்றிய ஒரு தொகுப்பு...
சருகுமான் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா ? : வேட்டையாடுதலால் அழிந்துவரும் அரிய உயிரினம்
x
சருகுமான் என்கிற பெயரைக் கேட்டவுடனேயே அது என்ன மான் ? என்று உங்களில் பலர் கேட்கக் கூடும். ஆனால் அது ஒருவகை மான் கிடையாது. அறிவியல் ரீதியில் மான் இன வகைப்பாட்டில் சேராத சிறிய குளம்பி விலங்குதான் இந்த சருகுமான்.

சருகு என்பதன் பொருள் இரட்டைக்குளம்பி என்பதாகும். அதிலும் இவை மான்போன்றே உருவத்தில் தோற்றமளிப்பதால் இதை சருகுமான் என்று கூறுகிறார்கள். மரம்,செடி, கொடிகளிடையே இலை தழைகளுடன் ஒன்றிக் காய்ந்த சருகுகளுக்கு இடையில் இது வாழும். அதன் தோற்றமும் சருகுகள் போன்றே இருப்பதால் இதன் பெயர் சருகுமான் என்றானதாகக் கூறுகிறார்கள் விலங்கியல் ஆர்வலர்கள்.

இன்னும் சிலரோ, இதன் ஆங்கிலப் பெயரான Mouse deer என்பதனை அப்படியே மொழிப்பெயர்த்து எலிமான் என்றும் அழைக்கின்றனர். சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள பொய்மான், மாயமான் என்பது இதுதான் எனவும் சொல்கின்றனர். அதாவது இதன் அதீத மறைந்து கொள்ளும் வேகமும், உடனடியாக மனித கண்களுக்கு புலப்படாத திறனும் இதற்கு அந்தப் பெயரை பெற்றுக் கொடுத்திருக்கிறது. இது ஒரு இரவாடி விலங்கு என்பதால் பெரும்பாலும் இரவு நேரத்திலேயே இரை தேடும். பகலில் சருகுமானைக் காண்பது அபூர்வம்தான்.

தமிழகத்தில் திண்டுக்கல் - சிறுமலை மற்றும் கொல்லிமலையின் வனப்பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் சருகுமான்கள் இருக்கின்றன. சிலபகுதிகளில் ஆதிவாசி மக்கள் இதனை கூரன்பன்றி எனவும் அழைக்கிறார்கள். இதுவே சரியான தமிழ்ப் பெயராக இருக்கும் என்றும் கருதப்படுகிறது. தெலுங்கில் இதன்பெயர் "ஜரினிபன்டி" அதாவது பன்றியும் மானும் சேர்ந்த கலவை என்பதாகும். மலையாளத்தில் இதன்பெயர் "கூரன்".

இவை உருவத்தில் மிகவும் சிறிய அமைப்பைக் கொண்டவை. இவற்றுக்கு கொம்புகள் இல்லை. சிறிய அளவில் வால் உண்டு. பார்ப்பதற்கு பழுப்பு நிறத்தில் தோற்றமளிக்கும் சருகுமான்கள், உடலின் மேற்புறம் மஞ்சள் தூவியது போலவும், அடிப்பகுதி வெண்மையாகவும் காணப்படும். இவற்றில் ஆண் சருகுமான்களுக்கு பன்றிகள் போன்ற கோரைப்பற்கள் உண்டு. இவை மத்தியப் பிரதேசம், ஒரிசா, பீகார் மாநில காட்டுப் பகுதிகளிலும் காணப்படுகின்றன.

வேட்டையாடுதல் காரணமாக, வேகமாக அழிந்துவரும் விலங்கினங்களுள் சருகுமான்களும் ஒன்று. கடுமையான வனவிலங்குகள் சட்டம் இருப்பினும் இன்றளவும்கூட பரவலாக வேட்டையாடப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இந்த சருகுமானில் இதுவரை சிற்சில வேறுபாடுகளுடன் 10 க்கும் மேற்பட்ட உள்ளினங்கள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது கூரன்பன்றி, பொய்மான், மாயமான், எலிமான், உக்கிழான் என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்