'காதல் கோயில்' எனப்படும் கஜுராஹோ கோயில்
பல்வேறு அதிசயம், ஆச்சரியம், கலையம்சங்களைத் தன்னுள்ளே கொண்டிருக்கும் கஜுராஹோ கோயில் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...
இந்தியாவின் 'காதல் கோயில்' எனப்படும் கஜுராஹோ கோயில் மத்திய பிரதேச மாநிலத்தில் இருக்கிறது.சண்டேலா மன்னர்களால் 12ம் நூற்றாண்டில் 20 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பிரம்மாண்டமாக இக்கோயில்கள் உருவாக்கப்பட்டன... சண்டேலா மன்னர்களின் தலைநகராக விளங்கிய மஹோபாவில் இருந்து 35 மைல் தூரத்தில் இந்த ஆலயங்கள் எழுப்பப்பட்டுள்ளன. அங்கே 85 கோயில்கள் இருந்த நிலையில், இப்போது 20 ஆலயங்கள் மட்டுமே உள்ளன.சிவன் சார்ந்த 6 ஆலயங்களும், 8 விஷ்ணு ஆலயங்களும், விநாயகர் கோயில் ஒன்றும், ஒரு சூரிய கோயிலும், 3 சமணர் கோயில்களும் இருக்கின்றன.இங்குள்ள கோயில்களை சண்டேலா வம்சத்தை சேர்ந்த பல மன்னர்கள் அவரவர் காலங்களில் கட்டியிருந்தாலும், Yashovarman மற்றும் Dhanga மன்னர்கள் அதிக ஆலயங்களை உருவாக்கியுள்ளனர்.தற்போது பலராலும் வியப்புடன் பார்க்கப்படும் Kandariya Mahadeva கோயில், 1017 முதல் 1029 க்குள் Ganda மன்னரால் கட்டப்பட்டதாகும்.ஒட்டுமொத்த கோயில்களும் 970 ம் ஆண்டில் இருந்து 1050 க்குள் கட்டப்பட்டவையாக இருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.அங்கே யோகிகள் பலர் தங்கியிருந்து யோகா , தியானம் உள்ளிட்டவற்றை பக்தர்களுக்கு கற்றுக்கொடுத்து வந்ததாக வரலாறுகள் கூறுகிறது.
13 ம் நூற்றாண்டின் துவக்கத்தில், டெல்லி சுல்தான் அங்குபடையெடுத்துச் சென்று சண்டேல மன்னர்களை வீழ்த்தும் வரை இக்கோயில்கள் கோலாகலமாக இருந்தன. அதன்பின்னர் தொடர் இஸ்லாமிய படையெடுப்புகளால்,இக்கோயில்கள் கடுமையாக சேதமாக்கப்பட்டன.அதை தொடர்ந்து கோயில் பராமரிக்கப்படாததால், கட்டடங்களில் மரங்களும் புதர்களும் மண்டி, ஒரு அடர்ந்த வனப்பகுதியாக மாறிவிட்டன.ஆனாலும் அங்கே யோகிகள் அதிக அளவில் வசித்து வந்தனர்.. ஆண்டுதோறும் பொதுமக்களால் சிறிய அளவில் திருவிழாக்கள் நடத்தப்பட்டு வந்தன..
இந்நிலையில் ,1830 ல் பிரிட்டிஷ் காரர்கள் அப்பகுதிக்கு சென்று, ஆலயத்தையும் சிற்பங்களையும் பார்த்து பரவசமடைந்தனர்... அதன் பின்னர் கஜுராஹோ சிற்பங்கள் உலகப்பிரபலமாகத் துவங்கின.கேதார்நாத், கயா, காசி வரிசையில் சிவபெருமானுக்கு உகந்த இடமாக கஜுராஹோ பார்க்கப்பட்டுள்ளது.சிவபெருமானுக்கு திருமணம் நடந்த இடமே இது தான் எனவும் கூறப்படுகிறது.பாலியல் ரீதியான சிற்பங்களுக்கு இக்கோயில் பெயர் பெற்றிருந்தாலும், அங்கே 10 சதவிகித சிற்பங்கள் மட்டுமே காமம் சார்ந்த சிற்பங்களாக உள்ளன.. பாலியல் சார்ந்த பாடல்களும் அங்கே பொறிக்கப்பட்டுள்ளன. ஐந்து கோயில்களில் மட்டுமே பாலியல் சம்பந்தமான
சிற்பங்களைக் காண முடியும்.இந்த காமச் சிற்பங்கள், அக்காலத்தில் பாலியல் தொழில்களில் ஈடுபட்டிருந்த பெண்களைப் பற்றியதேயாகும் என தொல்லியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்..
சிற்பங்களின் ஆடை, அணிகலன்களை வைத்து இதை யூகித்திருக்கிறார்கள். பெண்கள் நீராடுதல், ஒப்பனை செய்துகொள்ளல், ஆடைகள் மாற்றுவது போன்றவை எல்லாம் செதுக்கப்பட்டுள்ளன.மற்ற சிற்பங்கள் தெய்வங்களையும் பலதரப்பட்ட மக்களின் அன்றாட வாழ்வியல் முறைகளையும், குறிப்பிடுபவையாக உள்ளன.அரிதாரம் பூசும் பெண்கள், இசையமைப்பாளர்கள், குயவர்கள்,விவசாயிகள், மற்றும் மற்ற நாட்டுப்புற நிகழ்வுகளை எடுத்துக் காட்டுகின்றன.பெரும்பாலானோர் நினைப்பதுபோல கோயில்களின் சன்னிதிகளில் பாலியல் சிற்பங்கள் ஏதும் கிடையாது. பெரும்பாலும் சுற்றுப்புறச் சுவர்களிலும் ஆங்காங்கு உள்ள அடிப்பகுதி கற்களிலும்தான் புடைப்புச் சிற்பங்களாக பாலியல் சிற்பங்கள் உள்ளன.
சரி ஆன்மிகத் தலத்தில் எதற்காக இத்தகைய பாலியல் சிற்பங்கள்? 'கடவுளை நாம் அடைய வேண்டுமானால் காம குரோதங்கள் அனைத்தையும் வெளியே விட்டுவிட்டு உள்ளே செல்ல வேண்டும்' என்பதைக் காட்டுவதற்காகவே இவை செதுக்கப்பட்டுள்ளன என்கிறார்கள் ஒரு தரப்பினர்.ஆண் பெண் தாம்பத்தியம் புனிதமானது என்பதை உலகத்தினருக்கு உணர்த்தவே இந்தக் காமசூத்திரக் கலைகளை சிற்பங்களாக வடித்து நிறுவியிருக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள்.'கஜுர்' என்றால் பேரீச்சம்பழம் என்றும் 'ரஹோ' என்றால் தங்கம் என்றும் அர்த்தம். இந்தப் பகுதியில் விளைந்த பேரீச்சம் பழங்கள் தங்கம் போல் இருந்ததால் இப்பிரதேசத்துக்கு கஜுராஹோ என்று பெயர் வந்ததாம்.உலகத்தின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக தாஜ்மகால் மதிக்கப்படுவதைப் போல, இந்தியாவின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக கஜுராஹோ போற்றப்படுகிறது.
ஆலயங்களில் இன்றளவும் பூஜைகள் வழிபாடுகள் நடந்த வண்ணம் உள்ளன.
இங்குள்ள கோபுரங்களை, கைலாச மலையுடன் ஒப்பிடுகின்றனர்.சில கோயில்கள் தென்னிந்திய ஆலயங்களைப் போலவும் காணப்படுகின்றன..
கஜுராஹோ கோயில்கள் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய நினைவுச்சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.ஆண்டுதோறும் பிப்ரவரியில் இந்த ஆலயத்தின் வளாகத்தில் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படுகிறது.தினமும் மாலைவேளையில் நடத்தப்படும் ஒலி ஒளி நிகழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை ஈர்க்கின்றன.கஜுராஹோவின் சிறப்புகளையும், வளமையையும் இந்நிகழ்ச்சி குறிக்கிறது.கஜுராஹோ கோயில்களை கண்டுகளிக்க, தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் அங்கே குவிகின்றனர்.. அவர்கள் பல நாட்கள் தங்கி,பார்த்துவிட்டுச்செல்ல ஏதுவாக வசதிகள் செய்யப்பட்டுள்ளன. வெளிநாட்டு சுற்றுலாவாசிகளுக்காக 5 நட்சத்திர ஓட்டல்களும் அங்கே கட்டப்பட்டுள்ளன.
Next Story