பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில் பயனாளிகள் எண்ணிக்கை குறைந்தது
பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில் பயனாளிகள் எண்ணிக்கை குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில் பங்கு பெறும் விவசாயிகளின் எண்ணிக்கை 5 புள்ளி 72 கோடியாக இருந்தது. அது 2017-18ல் 4 புள்ளி 87 கோடியாக குறைந்துள்ளது. பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில் இருந்து சுமார் 85 லட்சம் விவசாயிகள் விலகியுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய விவசாயத் துறை இணையமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தெரிவித்துள்ளார்.
மகாராஷ்ட்ரா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் விவசாய கடன் தள்ளுபடி காரணமாக பயனாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக விவசாய துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பயிர் காப்பீடு பெற ஆதார் கட்டாயமாக்கப்பட்டதால், போலி பயனாளிகள் நீக்கபட்டதும் பயனாளிகள் எண்ணிக்கை குறைவுக்கு காரணம் என கருதப்படுகிறது.
உணவு மற்றும் எண்ணை பயிர்களுக்கான பயிர் காப்பீடு பிரிமியம் தொகையில் 2 சதவீதம் மட்டுமே விவசாயிகள் கட்டுவதாகவும், மீதி தொகையை மத்திய, மாநில அரசுகள் செலுத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது.
Next Story