ஆந்திராவில், தெலுங்கு மொழி கட்டாயம் - தவறும் நிறுவனங்களுக்கு அபராதம்
ஆந்திராவில் தெலுங்கு மொழியை கட்டாயப்படுத்தி, அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆந்திராவில் தெலுங்கு, தாய் மொழியாகவும், அலுவலக மொழியாகவும் உள்ளது. இந்நிலையில் தாய் மொழியை வலுப்படுத்தும் நோக்கில், கடும் நடவடிக்கைகளை அம்மாநில அரசு எடுத்துள்ளது.
இதுதொடர்பாக அம்மாநில அரசு அரசாணை ஒன்றைப் பிறப்பித்துள்ளது. இதன்படி, தெலுங்கு மொழி பாடம் இல்லாத கல்வி நிறுவனங்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதமும், அல்லது 6 மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்களுடன் நேரடி தொடர்பில் இருக்கும் அரசு ஊழியர்கள் கட்டாயம் தெலுங்கில் பேச வேண்டும் என்றும், இல்லாவிட்டால், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தெலுங்கு மொழியை அலுவலக மொழியாக பின்பற்றாத அரசு துறைகளுக்கு, 5 ஆயிரம் ரூபாயும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் பெயர் பலகைகள் தெலுங்கு மொழியில் இல்லாவிட்டால் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கென தனியாக 25 கோடி ரூபாய் மதிப்பில் "தெலுங்கு மொழி துறை" ஒன்றை ஏற்படுத்தவும் அரசு முடிவு செய்துள்ளது.
Next Story