சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் நேற்று இருவருக்கிடையே நடந்த தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக கிடைத்த தகவலை அடுத்து போலீசார் அங்கு சென்றனர். அப்போது, இறந்து கிடந்தவரின் அருகில் இருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அவர் தெரிவித்த தகவல்கள் அடிப்படையில், கே.கே.நகர் பகுதிக்கு சென்றபோது, அவர் பிரபல எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா என தெரிய வந்தது. இதையடுத்து, கொலையில் பிரான்சிஸ் கிருபாவுக்கு தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரித்த நிலையில், அது கொலை அல்ல எனவும் மாரடைப்பால் அந்த நபர் இறந்தார் எனவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிந்தது. இதையடுத்து, கோயம்பேடு காவல் நிலையத்தில் இருந்த ப்ரான்சிஸ் கிருபா இன்று விடுவிக்கப்பட்டார். இறந்து கிடந்தவரை மடியில் வைத்திருந்ததாலேயே அவர் மீது சந்தேகம் எழுந்ததும், உயிருக்கு போராடியவருக்கு அவர் உதவியதும் சிசிடிவி காட்சிகள் மூலம் தெரிந்துள்ளது. இந்நிலையில், பத்திற்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் காவல் நிலையம் சென்றதையடுத்து, அவரை போலீசார் விடுவித்தனர்.திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை சேர்ந்த பிரான்சிஸ் கிருபா, 7 கவிதைத் தொகுப்புகள் எழுதியுள்ளார். 'வெண்ணிலா கபடி குழு', 'அழகர் சாமியின் குதிரை' உள்ளிட்ட 16 படங்களில் பாடல்கள் எழுதியிருக்கிறார். தற்போது பைரி எனும் திரைப்படத்தில் பிரான்சிஸ் கிருபா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.