சினிமா பாணியில் உயிரோடு இருந்தவரை உயிரிழந்ததாக தெரிவித்த தனியார் மருத்துவமனை...
திருச்சி மாவட்டம், பூசாரிபட்டியை சேர்ந்தவர் சுமதி, கடந்த ஞாயிற்றுக் கிழமை வீட்டில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இதனை தடுக்க முயன்ற கணவர் முருகேசனும் தீக்காயம் அடைந்தார். இதையடுத்து சுமதியை மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இரண்டு நாட்கள் சிகிச்சை முடிவில் பெண் இறந்து விட்டதாக தனியார் மருத்துவமனை தரப்பில் இருந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரிடம் கூறியதாக தெரிகிறது. இதனால் சுமதியை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சுமதியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் உயிரோடு இருப்பதை உறுதி செய்து தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இது தொடர்பாக மணப்பாறை போலீஸ் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்துள்ளனர். எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படும் நிலையில், சுமதியின் உறவினர்கள் இன்று அந்த தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
