ஜே.பி.நட்டா மாற்று வாகனத்தில் பயணித்தது ஏன்? - நடந்தது இதுதான்.. காவல்துறை விளக்கம்
மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா குண்டு துளைக்காத வாகனத்தில் இருந்து மாற்று வாகனத்தில் பயணம் செய்தது தொடர்பாக, தமிழக காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வேலூரில் இருந்து சென்னை வந்த போது, வாகனத்தை 120 கி.மீ. வேகத்திற்கும் அதிகமாக இயக்கிய போது, பின் சக்கரத்தில் ஏற்பட்ட உராய்வால், வாகனத்தை சாலையோரம் நிறுத்தியுள்ளனர். பொதுவாக இந்த வாகனத்தை தொழில்நுட்ப காரணங்களுக்காக மற்ற வாகனங்களுக்கு இணையாக வேகமாக இயக்குவதில்லை. ஆனால் மத்திய அமைச்சரின் நேர்முக உதவியாளரின் வற்புறுத்தலால் 120 கி.மீ. வேகத்திற்கும் அதிகமாக இயக்கியதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே வாகனத்தை திடீரென நிறுத்திய போது, எட்டாவது நிலையிலிருந்த வாகனத்தின் மீது பத்தாவது நிலையிருந்த பாதுகாப்பு வீரர்களின் வாகனம் உரசியுள்ளது. இதில் அமைச்சர் பயணம் செய்த வாகனத்திற்கு எவ்வித சேதமோ, அதன் உள்ளிருந்தவர்களுக்கு எவ்வித பாதுகாப்பு குறைபாடோ ஏற்படவில்லை என்றும் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
