கணவன், மனைவிக்கு இடையே தகராறு - விலக்கி விட சென்ற சின்ன மாமியாரை குத்திக் கொன்ற மருமகன்

விருதுநகரில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறை தடுக்க சென்ற சின்ன மாமியாரை மருமகனே குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குடிப்பழக்கத்திற்கு அடிமையான ராம்குமாரால் தினமும் வீட்டில் சண்டையும் சச்சரவுமாக இருந்து வந்துள்ளது. ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாத முனீஸ்வரி, கணவரை பிரிந்து தன் தாய் வீட்டுக்கு சென்றார். கடந்த 6 மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் கணவரை விவாகரத்து செய்வதற்காக நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராம்குமார் நேராக மனைவியின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் அதிகமாகி கைகலப்பு ஆனதாக தெரிகிறது.


இதனை பார்த்த முனீஸ்வரியின் சித்தி மாரியம்மாள், இருவரையும் விலக்கி விட முயன்றுள்ளார். அப்போது கடும் கோபத்தில் இருந்த ராம்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாரியம்மாளை சரமாரியாக குத்தினார். இதேபோல் முனீஸ்வரி மற்றும் அவரின் தாய் சந்திரா ஆகியோரையும் சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த மாரியம்மாள் சம்பவ இடத்திலேயே பலியானார்.


இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ராம்குமாரை கைது செய்தனர். மாரியம்மாளின் சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். காயங்களுடன் முனீஸ்வரி மற்றும் அவருடைய தாய் சந்திரா ஆகியோர் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


X

Thanthi TV
www.thanthitv.com