சுற்றுலா தலமாக மாறும் வில்லிவாக்கம் ஏரி - பசுமைப் பூங்கா அமைக்கும் பணிகள் தீவிரம்

சென்னை வில்லிவாக்கம் ஏரியை, பொழுதுபோக்கு அம்சங்களுடன் சுற்றுலா தளமாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னை வில்லிவாக்கம் சிட்கோ நகர் பகுதியில் 39 ஏக்கரில் மிகப்பெரிய ஏரி உள்ளது. இதில் 27 புள்ளி 5 ஏக்கர் நிலத்தில் 27 கோடி ரூபாய் செலவில் பசுமை பூங்கா அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மீதமுள்ள 11 ஏக்கர் நிலம் சென்னை குடிநீர் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அதில் 10 புள்ளி 69 ஏக்கர் நிலம் நீரால் நிரம்பி காணப்படுகிறது. இந்நிலையில் வில்லிவாக்கம் ஏரியை புரனமைத்து சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு திட்டபணிகள் அதிவேகத்தில் நடந்து வருகிறது.

குழந்தைகளுக்காக பிரத்யேக விளையாட்டு திடல், படகு போக்குவரத்து, கண்ணாடி மேம்பாலம், திறந்தவெளி திரையரங்குகள், உடற்பயிற்சி நிலையம், ஆவின் பாலகம், குடிநீர் வசதி, பூங்காவிற்குள் அமர இருக்கை வசதி, புட் கோர்ட், 100 வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு வாகன நிறுத்துமிடம், சுற்றிலும் தடுப்பு வேலி, பூங்காவிற்கு வருகை தருவோர் சுத்தமான சுகாதாரமான காற்றை சுவாசிக்க மூலிகை செடிகள், மேலும் மணல் திட்டுகள் அமைக்கப்பட்டு பறவைகள் சரணாலயமாக மாற்றவும் பணிகள் நடந்து வருகின்றன.

சிறப்பம்சமாக, சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் ஏரியின் மையப்பகுதயில் கண்ணாடி தளத்துடன் சுமார் 250 மீட்டர் நீளத்தில் 12 புள்ளி 5 மீட்டர் உயரத்தில் கண்ணாடி மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இதில் படிக்கட்டுடன், லிப்ட் வசதியும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இது சிங்கப்பூரில் உள்ள மேக் ரிச்சி ட்ரி டாப் பிரிட்ஜ் வடிவத்தில் அமைக்கபட இருக்கிறது. தற்போது இந்த பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. வரும் செப்டம்பர் மாதம் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

வில்லிவாக்கம் ஏரி பசுமை பூங்கா திட்டத்தில், வாகனங்கள் நிறுத்துமிடம், தோட்டம், நீருற்று ஆகியவற்றின் கட்டுமான பணிகள் முடிந்து விட்டன. சிட்கோ நகர் வழியாக ஏரி தீம்பார்க்கிற்கு செல்ல நுழைவு வாயிலும் இங்கு உருவாக்கப்பட்டுள்ளது. வில்லிவாக்கம் ஏரி பசுமை பூங்கா, சென்னைவாசிகளுக்கு மற்றுமொரு சிறந்த பொழுதுபோக்கு மையமாக இருக்கும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.

X

Thanthi TV
www.thanthitv.com