Vellore | காதல் திருமணம் செய்த மகளின் கணவனை தீர்த்து கட்டிய தந்தை - வெளியான பகீர் பின்னணி
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே, காதல் திருமணம் செய்த மகளின் கணவரை அவரது மாமனாரே கூலிப்படையை ஏவி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அகரம்சேரி பகுதியைச் சேர்ந்த ராகவன், பணிக்கு சென்ற தனது மனைவி ஸ்வேதாவை அழைத்துவர இரவில் பைக்கில் சென்றபோது, பசுமாத்தூர் மேம்பாலம் அருகே மர்மநபர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்திய நிலையில், ராகவனின் மாமனார் அமுல்ராஜ் கூலிப்படையை ஏவி இந்தக் கொலையை அரங்கேற்றியது தெரியவந்தது. மேலும், காதல் திருமணம் செய்து கொண்ட ராகவன், அவரது மனைவி ஸ்வேதாவை தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்ததாகவும், திருமணமானது முதல் ராகவன் மற்றும் அவரது மாமனார் குடும்பத்தினருக்கு இடையே முன்விரோதம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, அமுல்ராஜ் மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட கார்த்திக் என்பவர் கைது செய்யப்பட்டனர். மேலும், பெங்களூருவைச் சேர்ந்த கூலிப்படையினரான ஐந்து பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
